முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
6. விருத்தகிரி பெரியநாயகியம்மை
நெடுங்கழி நெடிலாசிரிய விருத்தம்
சுட்டுதற் கரிய நின்னைமெய்ஞ் ஞான
      சொரூபியென் றருமறை யனைத்துஞ்
சொல்லுவ துண்மை யென்னநன் குணர்ந்தேன்
      சுரந்தநின் றிருமுலைச் செழும்பால்
வட்டிலிற் கொச்சைப் பிள்ளைமுன் னுண்டு
      வண்புகழ் ஞானசம் பந்த
வள்ளலென் றிடப்பேர் பெற்றரன் மொழிபோன்
      மையறீர் செய்யுள்செய் தமையால்
எட்டிநற் றிகிரி பறித்தெறிந் துரற்கா
      லியானையை யுருட்டிவாங் குதிரை
எறிந்துசங் கதிர்த்துக் கொடுமர முறித்திட்
      டெதிர்ந்திடார் தமைவிடுத் தோடிக்
கிட்டினர்ப் புரட்டி முருகவேள் பூதக்
      கிளைப்பெரு வெள்ளமொத் தெழுந்து
கிளர்மணி முத்த நதியுடை விருத்த
     கிரியமர் பெரியநா யகியே.
(4)
உள்ளமென் மனையில் விருப்பொடு வெறுப்பா
      முறுகுழி மேடுக ணிரவி
யொழிவிலா வாய்மை மெழுக்கினாற் பூசி
      யுயர்தரு மனமெனப் படுமோர்
பள்ளிமென் றவிசி லிருத்திநின் பதியைப்
      பழுதில்யா னெனப்படு நெல்லைப்
பழமல மாயைத் தவிடுமி போக்கிப்
      பாகஞ்செய் தென்றருத் திடுவாய்
துள்ளுமொண் மறிமான் முல்லையு ளாயர்
      சூழல்வெண் ணெய்க்குட முருட்டித்
துணைமுலைக் குவட்டின் மஞ்சண்மேற் படப்போய்த்
      தோய்ந்துநின் றாடிளங் கயற்கட்
கிள்ளைமென் மொழியார் துகிலெடுத் தொளித்துக்
      கேடில்சீர்க் கண்ணனா டுதல்போற்
கிளர்மணி முத்த நதியுடை விருத்த
      கிரியமர் பெரியநா யகியே.
(5)

4. மையல்தீர்-மயக்கந்தீர்ந்த. மணிமுத்த ஆற்றின் இயற்கை இப்பாட்டில் இயம்பப்படுகிறது. கொச்சை-சீர்காழியையும், திருத்தமுறாச் சொல்லையும்; எட்டி-எட்டி மரத்தையும், தாவியென்னு மெச்சத்தையும்; திகிரி-மூங்கிலையும், சக்கரத்தையும்; வாங்குதிரை-வளைந்த திரையையும், தாவுங்குதிரையையும்; கொடுமரம்-வலிய மரத்தையும், வில்லையும் உணர்த்தின. 5. உள்ளம் என் மனையில்-என்னுடைய மனமாகிய மனையில், தவிசு-இருக்கை. கிள்ளை-கிளி. மலம் மாயை தவிடு உமி என்பன நிரனிறை. பாகம்-மலபரிபாகத்தையும், சமைத் தலையும்; அருத்தல்-சீவபோத முளைத்தெழாது அர்ப்பித்தலையும், உண்பித்தலையுங் குறித்தன.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்