பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


106


பற்றுவெகு விதமாகி யொன்றைவிட் டொன்றனைப்
    பற்றியுழல் கிருமிபோலப்
  பாழ்ஞ்சிந்தை பெற்றநான் வெளியாக நின்னருள்
    பகர்ந்துமறி யேன்துவிதமோ
சிற்றறிவ தன்றியும் எவரேனும் ஒருமொழி
    திடுக்கென் றுரைத்தபோது
  சிந்தைசெவி யாகவே பறையறைய வுதரவெந்
    தீநெஞ்சம் அளவளாவ
உற்றுணர உணர்வற்றுன் மத்தவெறி யினர்போல
    உளறுவேன் முத்திமார்க்கம்
  உணர்வதெப் படியின்ப துன்பஞ் சமானமாய்
    உறுவதெப் படியாயினும்
மற்றெனக் கையநீ சொன்னவொரு வார்த்தையினை
    மலையிலக் கெனநம்பினேன்
  மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
    மரபில்வரு மௌனகுருவே.
     (பொ - ள்) "பற்றுவெகு . . . .உளறுவேன்" மண்ணிடமாக வாழும் புழுவைப்போன்று எளியேன் மனமானது பலவாறாகி ஒன்றனை விட் டொன்றனைப்பற்றி உழல்கின்றது. அத்தகைய பயனற்ற பாழான சித்தத்தைப் பெற்ற யான், வெளிப்படையாக நின் பெறற்கரிய திருவருளைப்பற்றி (ப் பாராட்டிப் புகழ்ந்து) மொழிந்தறியேன்; இருமை என்றுரைக்கின் அது சிற்றறிவாக முடியும்; அன்றியும், யாரேனும் ஒருவர் ஒருசொல்லைத் திடும்மென உரைத்தபோது, மனமே கேட்ட செவியினை யொத்துப் பறையறையவும், வயிற்றுத் தீயானது நெஞ்சு வரையும் கனன்றெரிந்து முட்டவும், அதனால் உண்மை உணர்வற்றுப் பெரும்பித்துக்கொண்ட வெறியினர் போன்று வீணாக உளறுவேன்.

    "முத்திமார்க்கம் . . . நம்பினேன்" - (நின்திருவடிப் பேறாம்) வீடுபேற்று நெறியினை எளியேன் உணர்ந்துய்வ தெவ்வண்ணம்? (இருவினைக்கீடாக வந்து பொருந்தும்) இன்பத்துன்ப நுகர்வுகளை (உன்னையே உள்ளத்தமைத்தலால் கொள்வார் போன்று) ஒப்பக் கொள்வ தெவ்வண்ணம்? எனினும், நீ உன் தண்ணளியால் அடியேனுக்குத் திருவாய்மலர்ந்தருளிய சிவ என்னும் ஒருமொழியை வெள்ளிடை மலையினைக் குறியாகக்கொண்டு ஒழுகுவார் போன்று அடியேன் நம்பி ஒழுகுகின்றேன்.

         "மந்த்ர . . . குருவே"

     (வி - ம்) வெகுவிதம் - பலவகை. கிருமி - புழு. பாழ் - வீண். துவிதம் - இரண்டு; இருமை. உகரம் - வயிறு. உன்மத்தம் - பெரும்பித்து.