பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

382
பொருளைப் பூவைப் பூவையரைப்
    பொருளென் றெண்ணும் ஒருபாவி
இருளைத் துரந்திட் டொளிநெறியை
    என்னுட் பதிப்ப தென்றுகொலோ
தெருளத் தெருள அன்பர் நெஞ்சந்
    தித்தித் துருகத் தெவிட்டாத
அருளைப் பொழியுங் குணமுகிலே
    அறிவா னந்தத் தாரமுதே.
    (பொ - ள்.) (இவ்வுலகத்தில் உடையானால் வழித்துணையின் பொருட்டுத் தந்தருளப்பட்ட) செல்வப் பொருளையும், நிலத்தையும் பெண்ணையும் (நிலைத்த விழுப்பயனாம்) பெரும் பொருள் என்று மயங்கக் கொள்ளும் ஒரு பாவியாகிய எளியேனுடைய பண்டேபுல்லிய ஆணவவல்லிருளை ஓட்டி யடக்கி ஒளிநெறியாகிய நன்னெறியினை அடியேன் உணர்வின்கண் பதித்தருளும் நாள் எந்நாளோ? திருவருளால் தெளியத்தெளிய மெய்யன்பர் நெஞ்சம் இனித்துருகத் தங்கிப் போதுமெனத் தெவிட்டாத திருவருளைப் பொழியும் எட்டு வான்குணப் பெருமுகிலே! உண்மை, அறிவு, இன்பப் பேரமுதே!

(8)
ஆரா அமிர்தம் விரும்பினர்கள்
    அறிய விடத்தை அமிர்தாக்கும்
பேரா னந்தச் சித்தனெனும்
    பெரியோய் ஆவிக் குரியோய்கேள்
காரார் கிரக வலையினிடைக்
    கட்டுண் டிருந்த களைகளெலாம்
ஊரா லொருநாட் கையுணவேற்
    றுண்டால் எனக்கிங் கொழிந்திடுமே.
    (பொ - ள்.) (உண்ணுந் தோறும் உண்ணுந் தோறும் வேட்கை பெருகுவிக்கும்) தெவிட்டாத பாற்கடலமிழ்தினை விரும்பிய தேவர்கள் (முழுமுதல்வன் அடிகளே என) அறியும்படி அக் கடலின்கண் தோன்றிய கண்டாரைக் கொல்லு நஞ்சினை அமிழ்தமாக்கும் பேராற்றற் பேறென்னும் சித்துடைய தன்மையால் அந் நஞ்சினையுண்டு இறவாதிருந்த பேரின்பப் பெருஞ் சித்தனெனும் பெரியோனே! எளியேனுடைய ஆவிக்கு என்றும் உரியோனே! கருமை நிறைந்த குடும்ப வலையினால் எளியேன் கட்டுணப்பட்டுத் துன்புறம் துன்பங்கள் நின்திருவருள் நினைவால் ஒவ்வொருநாளும் ஊர் தொறும் சென்று, செந்நெறியாளர் அன்பாலிடும் உணவை ஆர்வமுடன் கையிலேற்று, நின்திருவடிக்காதலால் நிலையினின்று அருந்தும் நீர்மை அடியேனுக்கு வாய்த்துவிட்டால் அத்துன்பம் அகன்றொழியும்.