இறைவன் எல்லாமாய் நிற்கும் நிலை வருமாறு:
| "உலகினை இறந்து நின்ற தரனுரு என்ப தோரார் |
| உலகவன் உருவில் தோன்றி ஒடுங்கிடும் என்றும் ஓரார் |
| உலகினுக் குயிரும் ஆகி உலகுமாய் நின்ற தோரார் |
| உலகினில் ஒருவன் என்பர் உருவினை உணரா ரெல்லாம்." |
| - சிவஞானசித்தியார், 1. 2 - 20. |
எங்குமாய் நிற்கும் இறைவன் இயல்பினை வருந் தனித் தமிழாகமத் திருமாமறையானுமுணர்க:
| "இணங்கிநின் றான்எங்கு மாகிநின் றானும் |
| பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும் |
| உணங்கிநின் றான்அம ராபதி நாதன் |
| வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே." |
| - 10. திருமந்திரம், கடவுள், |
உலகிடைக் காணும் எல்லா ஒளிகளுக்கும் ஒளி கொடுத்துக்கொண்டிருக்கும் அளவில்லாத அழிவில்லாத திருவருட் பேரொளி சிவபெருமான்றன் திரு ஒளியே என்னும் உண்மையினை வருமாறு காண்க:
| "நாயகன் கண்ந யப்பால் நாயகி புதைப்ப எங்கும் |
| பாயிருள் ஆகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித் |
| நூய நேத் திரத்தினாலே சுடரொளி கொடுத்த பண்பின் |
| தேயமார் ஒளிகள் எல்லாஞ் சிவனுருத் தேச தென்னார்." |
| - சிவஞானசித்தியார், 1. 2 - 24. |
மேலும் இவ்வுண்மை "நலமலி மங்கை நங்கை" (4. 14 - 8) என்னுந் தனித்தமிழ்த் திருமாமறையானுமுணர்க. அறுசமயப் பாகுபாடுகள் வருமாறு:
1. புறப்புறச் சமயம்: உலகாயதம், நால்வகைப் பௌத்தம். ஆருகதம் என ஆறு.
2. புறச்சமயம்: தருக்கம், மீமாஞ்சை, ஏகான்ம வாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என ஆறு.
3. அகப்புறச்சமயம்: சைவம், பாசுபதம், மாவிரதம், காளா முகம், வாமம், வைரவம் என ஆறு.
4. அகச்சமயம்: பாடாணவாதசைவம், சங்கிராந்தவாசைவம், அவிகாரவாதசைவம், பரிணாமவாதசைவம், சுத்தசைவம், பேதவாதசைவம் என ஆறு. இவற்றின் கொள்கைகளும், அவை பொருந்தாமையும், அவ்வனைத்தும் சித்தாந்த சைவத்திற்குப் படிமுறையாக நிற்கும் உண்மையும் "சிவஞானசித்தியார் பரபக்கத்தினும்" "சங்கற்ப நிராகரணத்" தினும் விளக்கமாகக் காண்க.