பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


132


பாரொடுநன் னீராதி யொன்றொடொன் றாகவே
    பற்றிலய மாகுபோழ்து
  பரவெளியின் மருவுவீர் கற்பாந்த வெள்ளம்
    பரந்திடி னதற்குமீதே
நீரிலுறை வண்டாய்த் துவண்டுசிவ யோகநிலை
    நிற்பீர் விகற்பமாகி
  நெடியமுகி லேழும் பரந்துவரு டிக்கிலோ
    நிலவுமதி மண்டலமதே
ஊரென விளங்குவீர் பிரமாதி முடிவில்விடை
    ஊர்தியரு ளாலுலவுவீர்
  உலகங்கள் கீழ்மேல வாகப் பெருங்காற்
    றுலாவின்நல் தாரணையினால்
மேருவென அசையாமல் நிற்கவல் லீருமது
    மேதக்க சித்திஎளிதோ
  வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
    வித்தகச் சித்தர்கணமே.
     (பொ - ள்) "பாரொடுநன் . . . நிற்பீர்" - நிலம், நீர் முதலாகச் சொல்லப்படுகின்ற ஐம்பெரும் பூதங்களும் ஒடுங்குங் காலத்து அவ்வவற்றிற்குரிய நாற்றம் சுவை முதலிய தன்மாத்திரைகளில் ஒடுங்கும்; இதுவே ஒன்றோடொன்றாக ஒடுங்குமுறைமையாம்; அங்ஙனம் உலகம் ஒடுங்குங் காலத்து மேலான அருள்வெளியில் பொருந்தி நிற்பீர்; ஊழிக் காலத்துத் தோன்றும் பெருவெள்ளம் எங்கணும் பரந்தபோது அதற்கு மேலாக நீரின்கண் தங்கும் உண்டென்னும்படி அசைந்து அந்நீரின் மிதந்து சிவயோக நிலையில் நிற்பீர்;

    "விகற்பமாகி . . . உலவுவீர்" - பெரிய மேகங்கள் ஏழும் வேறுபாடெய்தி எங்கணும் பரந்துவிடாது மழைபொழிந்தால், நிலவு பொழிகின்ற திங்கள் மண்டிலத்தின் மேலிடமே தங்கும் ஊரென விளங்குவீர்; அயன்மால் வானவர்கோன் முதலாகிய தேவர்கள் அனைவர்களும் இறந் தொழியுங் காலத்து ஆனேற்றினைத் தானேற்று ஊரும் அம்மையப்பராம் சிவபெருமான் திருவருளால் உலவாது உயிருடன் உலாவிக் கொண்டிருப்பீர்;

    "உலகங்கள் . . . எளிதோ"- உலகங்கள் அனைத்தும் கீழ்மேலாகத் தடுமாறும்படி பெருங்காற்றெழுந்து வீசுங்காலத்துப் பொறைநிலையென்று சொல்லப்படும் நல்ல தாரணை முறையால் பொன்மலையாகிய மேருவென்னும்படி அசையாமல் நிற்கும் பெருவன்மையு முடையீர். அத்தகைய நும்முடைய வியத்தகு மேன்மைமிக்க சித்திகளைச் சொல்லி அளவிடற்கெளிதாகுமோ? (ஆகாதென்க)

        "வேதாந்த . . . சித்தர்கணமே" -