பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

209
     "மனமாயை . . . . . . புகலாய்" - இத்தகைய மனமாயையினை ஐயையோ! எளியேனால் எளிதாக வென்றுவிட முடியுமோ? நின் திருவருள்பெற்ற மெய்யடியார்கட் கெல்லாம் அம்மனம் ஒளிபெற்று நிற்கும்; (அருள் பெறாதார்க்கெல்லாம்) மயக்குந் தன்மையாகிய மருளாக நிற்கும்; உலகின்கண் நான்கு பாகுபாடாகிய இருபத்து நான்கு சமயங்களுக்கு மேலாக நின்று நுண்ணிய சான்று வடிவாய் நின்றருள்வோனாகிய நீ எளியேனுக்கு மறைபொருளாய் நிற்கும் உளவினைப் புகன்று அருளுவாயாக;

         "சர்வபரி . . . சிவமே" -

     (வி - ம்.) போது - பொழுது. கற்பம்-ஊழி. சும்மாடு - சுமையடை. துர்ப்புத்தி - தீயஅறிவு.

     மனமாயை தனதல்லாத உடம்பினைத் தானென்றும், தனதல்லாத உடைமைகளைத் தனதென்றும் மாறுபட எண்ணச்செய்யும் வன்மையுடையது. அவ்வன்மை ஆணவமலச் சார்பானாவது. இஃது இரவிற் காணப்படும் சிறுவிளக்கொளி, பகலொளிபோன்று மயக்கங்கொள்ளாமல் பொருள்களைத் தெளிவுறக்கொள்ளத் துணைசெய்யாது நிற்பதை யொக்கும். பகலொளிபோன்ற திருவருட்சார்பான் ஆவி நிற்பின் அம்மன மாயை மயக்காது தெளிவுகொள்ளத் துணைநிற்கும். இவ்வுண்மை வருமாறுணர்க; "மாயைமா மாயை மாயா" (பக்கம் 112)

     சும்மாட்டின் இயல்பு வருமாறு :

"எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்
    எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
 செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை
    சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
 சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
    திருவானைக் காவுடைய செல்வா என்றன்
 அத்தாஉன் பொற்பாதம் அடையப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே."
- 6. 62 - 1.
(4)
 
இனியே தெமக்குனருள் வருமோ வெனக்கருதி
    ஏங்குதே நெஞ்சம்ஐயோ
  இன்றைக் கிருந்தாரை நாளைக்கி ருப்பரென்
    றெண்ணவோ திடமில்லையே
அனியாய மாயிந்த வுடலைநான் என்றுவரும்
    அந்தகற் காளாகவோ
  ஆடித் திரிந்துநான் கற்றதுங் கேட்டதும்
    அவலமாய்ப் போதல்நன்றோ