பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

25

(நன்றே செய்வாய் பிழைசெய்வாய் என்பது முதல்வனே நீ அடியேனைக் கொண்டு நன்மையும் தீமையும் செய்வித் தருள்வாய். அச்செயற்கு முதன்மை அடியேனுக்கில்லை என்பது.

     'இதசத்துரு - ' உட்பகை, "மறப்பித்துத் தம்மை மலங்களில் வீழ்க்கும் சிறப்பிலார்" எனப்படுபவரும் இவரே. இத்தகையாரைப் பற்றிக் கூறும் செந்தமிழ்ப் பொதுமறை வருமாறு :

"வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
 கேள்போல் பகைவர் தொடர்பு."
- திருக்குறள், 882
     படைக்கல மென்பது ஞானவாள். இவ்வுண்மை வருமாறு காண்க:

"படைக்கல மாகவுன் நாமத் தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
 இடைக்கல மல்லேன் எழுபிறப் பும்முனக் காட்செய்கின்றேன்
 துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித்தூ நீறணிந்துன்
 அடைக்கலங் கண்டாய் அணிதில்லைச் சிற்றம் பலத்தரனே."
- 4. - 81 - 8.
இத்தகைய உட்கருத்தே அமைந்த திருக்குறள் வருமாறு :

"ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்,
 மாற்றாரை மாற்றும் படை."
- திருக்குறள், 981
(5)
பூதலய மாகின்ற மாயைமுத லென்பர்சிலர்
    பொறிபுலன் அடங்குமிடமே
  பொருளென்பர் சிலர்கரண முடிவென்பர் சிலர்குணம்
    போனஇட மென்பர்சிலபேர்
நாதவடி வென்பர்சிலர் விந்துமய மென்பர்சிலர்
    நட்டநடு வேயிருந்த
  நாமென்பர் சிலர்உருவ மாமென்பர் சிலர்கருதி
    நாடில்அரு வென்பர்சிலபேர்
பேதமற வுயிர்கெட்ட நிலையமென் றிடுவர்சிலர்
    பேசில்அரு ளென்பர்சிலபேர்
  பின்னும்முன் னுங்கெட்ட சூனியம தென்பர்சிலர்
    பிறவுமே மொழிவர்இவையால்
பாதரச மாய்மனது சஞ்சலப் படுமலால்
    பரமசுக நிட்டைபெறுமோ
  பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
    பரிபூர ணானந்தமே.