பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

359
வாய்திறவா மௌனசற்குரவனே! நின் பொன்னடிப்போதினுக்கு அடியேன் போற்றி.

(6)
 
அடியெனும் அதுவும் அருளெனும் அதுவும்
    அறிந்திடின் நிர்க்குண நிறைவும்
முடியெனும் அதுவும் பொருளெனும் அதுவும்
    மொழிந்திடிற் சுகமன மாயைக்
குடிகெட வேண்டிற் பணியற நிற்றல்
    குணமெனப் புன்னகை காட்டிப்
படிமிசை மௌனி யாகிநீ யாளப்
    பாக்கியம் என்செய்தேன் பரனே.
     (பொ - ள்) முழுமுதற் பொருளென்று கூறப்படும் அப்பொருளும் (அதனை விட்டு நீங்காது அதன்குணமாய்க் காணப்படும்) அருளெனு மதுவும், திருவருட்டுணையால் அறியலுற்றால், மாயாகாரிய முக்குணமில்லாமல் (திருவருட்காரியமாகிய) எண்குண நிறைவுடையதாகும். முடியெனச் சொல்லப்படும் அதுவும் மெய்ப்பொருளெனச் சொல்லப்படுமதுவும் பேரின்பமாகும். மனத்திற்குடிகொண்டு விடாது மயக்கிக் கொண்டிருக்கும் மாயை அவ்விடத்தினின்று குடிவிட்டு ஓட வேண்டினால் அடியேனுடைய செயல் சிறிதுமில்லாமல் பேரின்பத் தழுந்தி நிற்றல் நற்பண்பாமென்று புன்னகை புரிந்து இந்நிலவுலகத்தே நீ மௌனியாக எழுந்தருளி எளியேனை ஆட்கொள்ளும்படியான பெருந்தவப்பேறு முன்பு என்ன செய்துள்ளேன்; பரனே அருள்வாயாக.

(7)
 
என்செய லின்றி யாவுநின் செயலென்
    றெண்ணுவேன் ஒவ்வொரு காலம்
புன்செயல் மாயை மயக்கின்என் செயலாப்
    பொருந்துவே னஃதொரு காலம்
பின்செயல் யாது நினைவின்றிக் கிடப்பேன்
    பித்தனேன் நன்னிலை பெறநின்
தன்செய லாக முடித்திடல் வேண்டுஞ்
    சச்சிதா னந்தசற் குருவே.
     (பொ - ள்) ஒவ்வொரு வேளைகளில் அடியேன் செய்வதுபோல் காணப்படும் அனைத்துச் செயல்களும் நின் செயல்களேயாம். மெய்ம்மையினை உளமார எண்ணுவேன்; (அவ்வெண்ணத்தினை அறவே மறந்து) மாயைமயக்காகிய புன்செயற்கு உட்பட்டு என்செயலாக எண்ணி இறுமாப்பு எய்துவேன்; அஃதொருவேளை. பின்பு எந்தச் செயலையும் எவர் செய்வதையும் எண்ணாமல் வாளாகிடப்பேன்; தெளிவறிவில்லாத பித்தனையொத்த அடியேன் மாறா நன்னிலை