பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

329
 தன்னாலே தன்னையுங் கண்டு தமைக்காணார்
 என்னா மெனாஅறிவா ரின்று."
- சிவஞானபோதம், 9. 1 - 1.
(13)
 
இல்லை உண்டென் றெவர்பக்க மாயினுஞ்
சொல்ல வோஅறி யாத தொழும்பன்யான்
செல்ல வேறொரு திக்கறி யேன்எலாம்
வல்ல நீஎனை வாழ்விக்க வேண்டுமே.
     (பொ - ள்) [ஒருயிர் தன்பால் முதன்மை (சுதந்திரம்) ஏறட்டுக் கொண்டு திரியுங் காலமுற்றும் முதல்வன் பின்னின்றருள்வன், முதல் வன்மாட்டு முதன்மையும் தன்மாட்டு அடிமையும் கொண்டொழுகுங் காலத்து அவன் முன்னின்றருள்வன்] அடியேன் இல்லை யென்றோ? உண்டென்றோ? எவர்பாலும் சென்று சிறப்பித்துக் கூற அறியாத தொண்டனாகிய யான் கற்புடைப் பெண்டிரைப்போல் உன்னை யன்றிப் புகலிடம் பிறிதொன்றும் அறியேன். எல்லாம் வல்ல முடிவிலாற்றலையுடைய நீ அடியேனை வாழ்வித்தருள வேண்டும்.

(14)
 
வேண்டுஞ் சீரருள் மெய்யன்பர்க் கேயன்பு
பூண்ட நானென் புலம்அறி யாததோ
ஆண்ட நீஉன் அடியவன் நானென்று
தூண்டு வேனன்றித் தொண்டனென் சொல்வதே.
     (பொ - ள்) முதல்வனே! நின்திருவருளை அடியேனுக்கு அளித்தருள வேண்டும். (அதற்கு வாயிலாகிய) உன் மெய்யன்பர்கட்கே அன்புபூண்டொழுகினன்; அடியேன் உள்ளமறியாமே உள்ளத்தே மிக்கெழுந்து ஆண்டருளினை. அதனால் உன் அடிமை நானென்று தூண்டுவ தொன்றன்றி வேறென் சொல்வது?

(15)
 
எனக்கு ளேஉயி ரென்னஇருந்தநீ
மனக்கி லேசத்தை மாற்றல் வழக்கன்றோ
கனத்த சீரருட் காட்சி யலாலொன்றை
நினைக்க வோஅறி யாதென்றன் நெஞ்சமே.
     (பொ - ள்) அடியேன் நெஞ்சினிடமாக உயிருக்கு உயிராக வீற்றிருந்தருளும் நீ, எளியேன் பண்டைப்பயிற்சி வயத்தால் மனத்துன்பம் அடைவேனாயின் அத்துன்பினை மாற்றியருளுதல் நின் முறைமை யன்றோ? மேலான நின் திருவருட் காட்சியாலல்லாமல் வேறொன்றை நினைக்கவே என்னெஞ்சம் யாண்டும் அறியாது.

(16)