பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

589
     (வி - ம்.) எப்பொழுதும் கனவினுக்கும் நினைவின் மிகுதி அடிப்படையாகும். கனவு நனவின்கண் கண்டவாறே வந்து பொருந்தினால் பயன்தரும். அதனால் நனவின்கண் எழுந்தருள வேண்டுமென வேண்டுவதாகும். கனவினியல்பு வருமாறு :

"ஓர்த்த திசைக்கும் பறைபோல் நெஞ்சத்து
 வேட்டதே கண்ட கனா."
- கலித்தொகை 92.
(330)
 
மால்வைத்த சிந்தை மயக்கறஎன் சென்னிமிசைக்
கால்வைக்க வுங்கனவு கண்டேன் பராபரமே.
     (பொ - ள்) உலகியற் பொருள்களில் அடியேன் உள்ளம் சென்று மயங்குகின்ற மயக்கம் நீங்க எளியேன் முடியின்மீது தேவரீர் திருவடி வைத்தருளவும் கனவு கண்டேன்.

(331)
 
மண்ணான மாயையெல்லாம் மாண்டுவெளி யாகஇரு
கண்ணார வுங்கனவு கண்டேன் பராபரமே.
     (பொ - ள்) நிலமுதலாகக் காரியப்படும் மூலப்பகுதி மாயை முற்றும் அடியேன் உள்ளத்தினின்றும் நீங்கி அங்குத் திருவருள் வெளியே உணர்வு ஒளியாகக் காணும்படி கனவு கண்டேன்.

(332)
 
மண்ணீர்மை யாலே மயங்காதுன் கையால்என்
கண்ணீர் துடைக்கவும்நான் கண்டேன் பராபரமே.
     (பொ - ள்) உலகியல் நிலையால் அடியேன் மயங்காது திருவருள் நிலையால் நிற்குமாறு தேவரீர் ஆசிரியத்திருக்கோலங் கொண்டருளி வந்து எளியேன் கண்ணீரை நின்திருக்கையால் துடைத்தருளவுங் கனவு கண்டேன்.

(333)
 
உள்ள துணரா வுணர்விலிமா பாவியென்றோ
மெள்ளமெள்ளக் கைநெகிழ விட்டாய் பராபரமே.
     (பொ - ள்) மெய்ப்பொருளுண்மை தெளியும் உணர்வில்லாத கொடிய பெரும்பாவியென்று திருவுள்ளங் கொண்டோ எளியேனை மெள்ள மெள்ளக் கைசோர விட்டருளினை.

(334)
 
எல்லாம் நினதுசெயல் என்றெண்ணும் எண்ணமும்நீ
அல்லால் எனக்குளதோ ஐயா பராபரமே.
     (பொ - ள்) அறிவிலா உலகின்மாட்டும், சுட்டறிவும் சிற்றறிவுமுடைய ஆருயிர்கள்மாட்டும் காணப்படும் இயக்கங்கள், அனைத்தும் நின்திருவருள் இயைந்தியக்கும் இயக்கத்தால் இயங்குவன என்னும் மெய்ம்மை எண்ணம் அடியேனுக்கு உண்டாக வேண்டுவதும் நின்திருவருட் குறிப்பினால் ஆவதாம். அவ்வெண்ணமும் நின்திருவருள் எண்ணத்தாலன்றி எளியேனுக்கு உண்டாகுமோ? (உண்டாகாதென்பதாம்.)

(335)