ஈண

 

பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

11

    ஈண்டுச் சில இன்றியமையாக் குறிப்புக்களையும் உணர்த்துதல் நன்று. பிள்ளைத் தமிழ் நூல்கள் பெரும்பாலும் அகவல் விருத்தத்தால் அமைந்துள்ளன. பாட்டியல்காரர்கள் வகுப்பாலும் அமையலாம் என்கின்றனர். வகுப்பு என்பதும் விருத்தமே. ஆனால் இஃது ஓர் அடியில் பற்பல சீர்கள் அமையப் பாடப்படும், ஒரு வகுப்பின் கால் அடியே ஒரு தனிப் பாட்டுப் போலக் காணப்படு்ம், அவ்வகுப்புப் பாடல்களைக் காண விழைவார் அருணகிரியார் வாக்காக உள்ள வகுப்பில் காணலாம்.

    திரைக்கடலை உடைத்துநிறை புனல்கடிது

       குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர

    நிறைத்துவிளை யாடும்

       திசைக்கிரியை முதல்குலிசன் அறுத்தசிறை

    முளைத்ததென முகட்டினிடை பறக்கஅற

       விசைத்ததிர ஓடும்

    சினத்தவுணர் எதிர்த்தாண களத்தில்வெகு

       குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி

    விழித்தலற மோதும்

       திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை

    விருத்தன்என துளத்தில்உறை கருத்தன்மயில்

       நடத்துகுகன் வேலே.

    இது வேல் வகுப்பு. மேலே காட்டிய செய்யுள் ஒரு முழுச் செய்யுள் அன்று. ஒரு செய்யுளின் நான்கடிகளுள் ஓர் அடியாகும். இது முழுச் செய்யுளின் ஈற்றடி.

    வகுப்புப் பாவால் பாடப்பட்ட பிள்ளைத் தமிழ் நூல்கள் எதுவும் கண்ணுக்குத் தென்பட்டிலது என்றாலும், சிற்சில பிள்ளைத் தமிழ் நூல்களில் வகுப்புப்போன்ற பாடல்கள் காப்புப் பருவத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.

    எடுத்துக்காட்டிற்குக் கூறவேண்டுமானால் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழில் உள்ள சிதம்பரேசர் பற்றிய பாடலையும், சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ்க் காப்புப் பருவத்தில் கங்காதேவிமீது பாடப்பட்ட பாட்டையும்