14

பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

     தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும்

       இறைவனது தன்மை பாடிக்

   கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானை

      பாட்டய ரும்கழு மலமே.

 என்ற திருப்பாடலைக் காண்க.

   பெண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய பத்துப் பருவங்களும் அமைந்த நூலாகப் பாட்டியல் இலக்கணத்துக்குட்பட்டு வந்த நூல்கள் பலவாகும். அந்நூல்கள் பின்னர்க் குறிக்கப்படும்.

   இனி ஆண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய குறிப்புக்கள் சங்க காலத்தில் உண்டா என்பதையும் ஆய்தல் வேண்டும். அங்ஙனம் ஆய்ந்தபோது பட்டினப்பாலையில் வரும்,

    “பொன்கால் புதல்வர் புரவியின் றுருட்டும்

    முக்கால் சிறுதேர் “

என்னும் அடிகள், சிறுதேர்ப் பருவக் குறிப்பை அறிவிக்கின்றன.

    சிறுதேர்ப் பருவக் குறிப்புப் பட்டினப் பாலையில் அறிய வருவதுபோல், கலித்தொகையில் சிற்றில் சிதைத்தல் ஆகிய பருவ நிகழ்ச்சி காணப்படுகிறது.

    “ சுடர்த்தொடீ கேளாய் தெருவில்நாம் ஆடும்

       மணல்சிற்றில் காலில் சிதையா அடைச்சிய

    கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி

       நோதக்க செய்யும் சிறுபட்டி “

 என்னும் குறிஞ்சிக் கலி அடிகளைக் காணவும்

   சங்ககாலத்திற்குப் பிறகு இடைப்பட்ட காலமாகிய தேவாரக் காலத்தில் கி.பி. ஒன்பதாவது நூற்றாண்டினராகக் கருதப்படுகின்ற அதிரா அடிகள் என்பார், மூத்தப்பிள்ளையார் மும்மணிக்கோவை என்னும் நூலைப் பாடியுள்ளனர். அது சைவத் திருமுறையில் ஒன்றான பதினோராம் திருமுறைத் தொகுப்பில் அமைந்துள்ளது. அம் மும்மணிக்கோவையில்,