| களவு |
| கொடுவட்டி சூதுபொருள் இழப்பித்தல் களவே |
210 | நட்ட மேபிறர்க் கெய்திடச் செய்தலும் நம்பி இட்டர் வைத்தநற் பொருளப கரித்தலு மிறப்ப வட்டம் வட்டிகள் வாங்கலுஞ் சூதிற்பொன் பெறலும் இட்ட வேலைசெய் யாதுகைக் கூலிகொள் ளியல்பும். |
|
| பிறருக்குப் பொருள் இழப்பு உண்டாக்கலும், நண்பர்கள் நம்பித்தந்த பொருளைத் தனதாக்கிக் கொள்ளலும், அளவுமீறி வட்டம் வட்டி வாங்குதலும், சூதாடிப் பொருள் சேர்த்தலும், வேலை செய்யாது கூலி பெறுதலும் களவாம். |
| நட்டம்-இழப்பு. வட்டம்-பணமாற்றக் கொடுக்கும் வாசி. வட்டி-பெற்ற முதலுக்கு கொடுக்கும் ஊதியம். |
| 3 |
| கன்னம் பொய்காசு கைக்கூலி களவே |
211 | கன்னம் வைத்தசெல் லாப்பணம் வழங்குதல் கள்ள மன்னு சீட்டையுண் டாக்குதல் கைலஞ்சம் வாங்கல் என்னும் யாவுமே களவதா மித்தொழிற் கியைவோர் மன்ன ராக்கினை வசைநர கடைந்துவா டுவரால். | |
| கன்னம் வைத்தலும், செல்லாக் காசை வழங்கலும், கள்ளச் சீட்டுப் பிறப்பித்தலும், கைக்கூலி வாங்கலும் முதலிய எல்லாமும் களவாகும். களவு செய்வோர் வேந்தரால் தண்டிக்கப்படுவர். பழியும் நரகும் எய்துவர். |
| கன்னம்-மதில், பூட்டு முதலியவற்றைத் திறக்குங் கருவி. கைலஞ்சம்-கைக்கூலி. |
| 4 |
| களவால் விலங்கு, சிறை, காதற் பிரிவுண்டாம் |
212 | திலக வாணுதல் தேவியைச் சேயரைப் பிரிந்து கலக லென்னவே யொலிசெய்மா விலங்குகாற் பூண்டிவ் வுலகம் ஏசிடச் சிறையகத் துற்றுமண் சுமந்து சிலுகெ லாமுறல் சிறிதுபொன் திருடலா லன்றோ. | |
| சிறுபொருட் களவால் மனைவியையும் மக்களையும் நீங்கி, கையிலும் காலிலும் இருப்பு விலங்கு பூண்டு, உலகோர் பழிக்கச் சிறைபுகுதல், மண்சுமந்து துன்புறல் முதலியன உண்டாகும். |