| நீதிநூல் |
| பொன்னைப் புதைப்பார் வாயில் மண்ணே புதையும் |
276 | பொன்னைமா நிலத்தில்யான் புதைக்கும் ஏல்வையின் அன்னையே யனையபா ரருளி நோக்கிநற் சொன்னமென் வாயிடைச் சொரியு முன்றன்வாய்க்கு என்னையே யிடுவனென் றிசைத்திட் டாளரோ. |
|
| கடும்பற்றுள்ளவன் பொன்னை நிலத்தில் புதைத்தான். அப்பொழுது தாயையொத்த நிலமகள் அவனைப் பார்த்து அருள்கூர்ந்து என்னிடம் பொன்னைச் சொரியும் உன் வாய்க்குக் கைம்மாறாக என்னையே (மண்ணையே) இடுவன் என்று இசைத்தாள். |
|
மண்ணையிடுதல்-பொருளிழந்து போதல். இசைத்திட்டாள்-கூறினாள். | | 2 |
| பாத்துண்டலும் பலர்க்கீதலும் இல்லான்பொன் பாழே |
277 | பொலிவளந் தங்கிய புவியிற் றானுண்டும் பலிபிறர்க் கிட்டுமே பயன்றுவ் வான்பொருள் வலியிலாப் பேடிகை வாள்கொல் ஆணென அலியினை மேவிய அரம்பை யேகொலோ. |
|
| மிகுந்த செழிப்புள்ள உலகத்தில் தன் வயிறு ஆர உண்டும் வறியவர்கட்குக் கொடுத்தும் பயன் அடையாதவன் செல்வம், ஆண்மையில்லாத பேடி கை வாள் போலவும் அலியைப் பொருந்திய தெய்வப் பெண்போலவும் பயனிழந்து வீணாம். |
| பொலி-செழிப்பு. பலி-பிச்சை. அரம்பை-தெய்வப்பெண். |
| 3 |
| பயன்பெறாச் செல்வன் பாரந்தாங்கியும் கழுதையுமொப்பான் |
278 | நித்திய மனுபவி யாது நீணிதி பத்திரஞ் செய்குவோன் பாரந் தாங்கவூர் மத்தியிற் புதைத்தகல் மாசில் தூசர்க்கு வத்திரஞ் சுமக்கும்வா லேய மொப்பனே. |
|
| செல்வத்தை நாள்தோறும் நல்ல முறையாக நுகராது தொகுத்துக் காப்போன் ஊர் நடுவுள் சுமை தாங்க நாட்டிய சுமைதாங்கிக் கல்லையும், அழுக்ககற்றும் வண்ணார்க்கு ஆடை சுமக்கும் கழுதையையும் ஒப்பான். |
| நித்தியம்-நாள்தோறும். அனுபவியாது-நுகராது. பாரம்-சுமை. தூசர்-வண்ணார். வாலேயம்-கழுதை. |
| 4 |