பக்கம் எண் :

135

 அதி. 24-சோம்பல்
  மடியராய் உழையாதார் மரம் சவம் ஆவரே
288
சிற்றெறும் பாதியாச் சீவ கோடிகள்
முற்றுமெய் யுழைத்துயிர் முறையிற் காக்குமால்
சற்றுமெய் யசைவிலாச் சழக்க ராருயிர்
அற்றவோர் சவங்கொன்மற் றசர மேகொலோ.
 சிறிய எறும்பு முதல் பெரிய யானைவரை எல்லா உயிரினங்களும் உழைத்து முறையாகத் தம் உயிரைக் காக்கின்றன. உடல் ஒருசிறிதும் அசையாது மடியராய் இருக்கும் தீயோர் உயிர் அற்ற சவமோ? அல்லது நிலைத்திணையாகிய பட்ட மரமோ?
 
1
 உழையாது சோம்புவோர் ஒரு பெருந் தீயரே
289
விடக்குறுஞ் சடம்பல வேலை செய்தற்கா
நடக்கவு மோடவு நனியு றுப்புகள்
மடக்கவு நீட்டவும் வாய்ந்த தாற்சும்மா
கிடக்குமெய்ச் சோம்புளோர் கேடு ளார்களே.
 இறைச்சி நிறைந்த அறிவில்லதாகிய இவ்வுடல் வேலை செய்தற் பொருட்டே, உறுப்புகள் நடக்கவும், ஓடவும், மடக்கவும், நீட்டவும் பொருத்தமாக வாய்ந்தன. அப்படியிருந்தும், வேலை செய்யாது அவ் வுறுப்புகளை வறிதே கிடக்கும்படி செய்வோர் தீயவராவர்.
 விடக்கு-இறைச்சி. சடம்-அறிவில்லது; உடல். சும்மா-வறிது.
 2
 குடும்பம் பேணுவோர் சோம்பலை கொள்ளார்
290
தெளிவுற நூல்பல தினமும் வாசித்து
மிளிருடல் வருந்தியும் வெறுக்கை யீட்டிநற்
கிளிமொழி மனைவியைக் கிளைஞ ரைப்பல
எளியரைத் தாங்குவோர்க் கில்லை மந்தமே.
 மெய்ந்நூல்களை நாடோறும் தெளிய ஓதி, விளங்கும் உடல் வருந்தப் பாடுபட்டுப் பணம்தேடி, கிளிமொழி போன்ற மனைவியையும் கிளைஞர்களையும் பல எளியவர்களையும் பேணிவருவோர்க்குச் சோம்பல் உண்டாகாது.
 தெளிவுற- (ஐயந்திரிபின்றிச்) செம்மையாக. வெறுக்கை-பணம். மந்தம்-சோம்பல்.
  3