பக்கம் எண் :

163

  இனியசொற் கூறல்
 
 

அறிவுக்குறைவால் நல்லோர் அல்லோர்போல் தோன்றுவர்

346
வெருட்சியுளோர்க் கெங்கணும்பேய் உருத்தோன்றும்
    எழின்முகத்தை விகற்ப மாக்கித்
தெருட்சியில்கண் ணடிகாட்டும் அவைபோல்தீ
    தியற்றாருந் தீயர் போலப்
பொருட்சிதைவால் தோன்றுவர்தீ தெனவறமும்
    தோன்றுமவர் புரிபி ழைக்கு
மருட்சியில்பல் காரணங்க ளுளவாமென்
    றுனிப்பொறுப்பர் மாண்பி னாரே.
 

மனக்கலக்கம் உடையவர்கட்கு எல்லா இடங்களிலும் பேயுருவே தோன்றும். தெளிவில்லாத கண்ணாடி அழகிற் சிறந்த முகத்தையும் அழகிற் குறைந்த முகமாக வேறுபடக் காட்டும்.இவைபோன்று அறிவுக் குறையால் தீமைசெய்யாதாரும் தீயர் போல் காணப்படுவர். அறமும் தீமைபோல் காணப்படும். அவர் தீமைசெய்வதற்கு மயக்கத்தால் பல காரணங்களுண்டு. இவைகளை எண்ணிப் பிழையைப் பொறுப்பர் பெரியோர்.

  வெருட்சி-மனக்கலக்கம். விகற்பம்-வேறுபாடு. தெருட்சி-தெளிவு. பொருள்-அறிவு. மருட்சியில்-மயக்கத்தினால். மாண்பினர்-பெரியோர்.
 

8

 

அதி. 32-இனியசொற் கூறல்

இசைநன்மை நண்பெலாம் தருவது இன்சொல்

347
வட்டவுல கெட்டுமிசை மட்டற நிரப்பும்
வெட்டவரு துட்டரை விலக்கிவச மாக்கும்
நட்டமிலை யெட்டனையு நட்டுநர ரெல்லாம்
இட்டமுறு கட்டுதவும் இன்மொழிய தன்றோ.
 

இன்சொல், உருண்டை உலகத்து வழங்கும் திசை எட்டிலும் புகழை அளவில்லாமல் நிறைவிக்கும். கொல்ல வருகின்ற தீயவரையும் நீக்கி இணங்கச்செய்யும். இன்சொல் சொல்லுவதால் இழப்பு ஏதும் இன்று. மக்களை எல்லாம் நண்பராக்கி விருப்பகலாப் பிணைப்பை உதவும்.

  வட்டம்-உருண்டை. இசை-புகழ். நட்டம்-இழப்பு. கட்டு-பிணைப்பு.
 

1