| அதி. 36-தற்புகழ் |
| பிறரால் புகழப் பெறுவதே பெருமை |
371 | தன்றுதி பிறர்சொலத் தகுமன் னோர்புகழ் இன்றியே தன்னைத்தான் ஏத்தல் ஊர்தியில் ஒன்றுமா பூட்டிடா தொருவன் உள்ளுறூஉம் மன்றவே நடத்துவான் வலித்தன் மானுமே. | |
| தன் புகழைப் பிறர் வாயாரச் சொல்லுவதே தக்கது. அப்படிக்கின்றித் தன்னைத் தான் புகழ்தல், வண்டியுள் இருப்பவன் அவ்வண்டியை இழுப்பதற்கு மாடு, குதிரை இவற்றுள் ஒன்றும் பூட்டாமல் இருந்தபடியே அவ்வண்டியை உந்தித் தள்ளுவதையே ஒக்கும். |
| துதி-புகழ். ஊர்தி-வண்டி. மா-மாடு; குதிரை. வலித்தல்-தள்ளுதல். மானும்-ஒக்கும். |
| 1 |
| நேரில் புகழ்வது நினைக்கில் வைவாம் | |
372 | ஒருவன்கா ணாவிடத்து உவனை மெச்சலே தருமமாம் முகத்துதி சாற்றல் வைதலாம் பெருமுறை யீதெனில் பிறர்முன் தன்னைத்தான் பொருளென மெச்சல்போற் புன்மை வேறுண்டோ. | |
| ஒருவனைக் காணாவிடத்து அவன் புகழை எடுத்துப் பேசுதல் அறமுறையாம். அவன் நேரில் புகழ்வது திட்டுவதே யாகும். இவற்றுக்கு மாறாகத் தன்னைத்தானே மதித்துப் புகழ்வது இழிவாம். |
| முகத்துதி-புகழ். வைதல்-திட்டல். புன்மை-இழிவு, |
| 2 |
| பல்லக்கைத் தான் சுமக்கும் பண்பே தற்புகழ்தல் |
373 | தன்துதி பிறர்சொலத் தகுந்தன் வாயினால் ஒன்றுறத் தன்துதி யோதல் ஊர்ந்துதான் சென்றிடும் ஊர்தியைச் சிவிகை யாரின்றித் துன்றுதன் தோளினால் சுமத்தல் போலுமே. | |
| தன் புகழைப் பிறர் கூறுவது தக்கது. தானே புகழ்வது, பல்லக்கின்மேற் செல்வோன் அப் பல்லக்கைச் சுமக்கும் ஆட்கள் இல்லாமல் தன் தோளினால் தானே சுமந்து செல்வதை ஒக்கும். |
| ஊர்தி-ஈண்டுப் பல்லக்கு. சிவிகையார்-பல்லக்குச் சுமப்போர். |
| 3 |