பக்கம் எண் :

178

  நீதிநூல் 
 
 

பிறர் சொலால் துன்புறுத்தும் நெஞ்சநஞ் சொக்கும்

380
வசையுமீக் கூற்று மற்றோர்
    வாய்வரு வாயு வல்லாற்
பசையுள தோவக் காற்றைப்
    பாரிலோர் பொருளென் றெண்ணி
இசையினான் மகிழ்வும் பேசும்
    இகழ்வினால் துயரும் உற்று
நசையினால் கொல்லு நெஞ்சம்
    நஞ்சமே யொக்கு மாதோ.
 

நெஞ்சே! பழியும் புகழும் பிறர் வாயிலிருந்து வரும் காற்றாகிய வெற்றோசையல்லாமல், அதனால் ஒரு பயனும் இன்று. உலகத்தில் அவற்றைப் பொருள் எனக் கருதிப் புகழ்ச்சியால் இன்பும், இகழ்ச்சியால் துன்பும் கொள்கின்றாய். புகழ்ப்பற்றால் என்னைத் துன்புறுத்துகின்றாய். அதனால், நீ உயிர் கொல்லும் நஞ்சினையே ஒப்பாய்.

  வசை-பழி. மீக்கூற்று-புகழ். வாயு-காற்று. நசை-பற்று.
 

2

 

நாய்கழுதை புள்ளொலிபோல் நாடிடுக கொடுஞ்சொல்லை

381
சுணங்கனோர் பாற்கு ரைக்கும்
    சூழ்கரங் கத்து மோர்பால்
பிணங்கியே புள்ளொ லிக்கும்
    பெரும்பறை யோர்பா லார்க்கும்
இணங்கியிவ் வொலிக ளெல்லாம்
    ஏற்கின்ற செவியோர் தீயன்
குணங்கெடக் கூறும் வன்சொற்
    கொண்டிடிற் குறையென் னெஞ்சே.
 

நெஞ்சே! ஒருபக்கம் நாய் குரைக்கும். கழுதை கத்தும். கோட்டான் முதலிய பறவை ஓசையிடும். பெரிய தோற்கருவிகள் முழங்கும். இவற்றையெல்லாம் பொருந்திக் கேட்கின்ற நம் காதுக்கு, ஒரு கொடியவன் கூறும் கடுஞ்சொல்லைக் கேட்பதால் வரும் தீங்கு என்ன இருக்கின்றது? ஒன்றும் இன்று.

 சுணங்கன்-நாய். கரம்-கழுதை. புள்-பறவை. இணங்கி-பொருந்தி.
 

3