பக்கம் எண் :

190

 நீதிநூல்
 
 

குளமும் யாறும் மழையினிடத்து வேண்டிப் பெற்றும் நீரை வயல்களெங்கும் நிறைத்து வைக்கும். அதுபோல், நன்மை நாடும் நல்லோர்கள் எவரிடத்து இரந்தும் ஏழைகள் இருக்கும் இடத்தைப் போய் ஆராய்ந்து பகுத்து உண்டு பயன் பெறுவர்.

 கார்-மழை. இரத்தல்-வேண்டிப்பெறுதல். கயம்-குளம். பணை-வயல். அறம்-நன்மை. பார்-உலகம்.
 

19

வேறு

 

ஆல்போல் பிறர்க்கு நன்மை ஆற்றுவர் நல்லோர்

405
சாடுவெங் கோடையைத் தலையிற் றாங்கியும்
மாடுளோர்க் கருநிழல் வழங்கும் ஆலெனக்
கேடுதம் பான்மிகக் கிளைக்கி னுங்குணப்
பீடுளோர் நன்மையே பிறர்க்குச் செய்வரால்.
 

ஆலமரம் தன்மேல் மோதும் கடுமையான கோடை வெயிலைத் தாங்கித் தன்பக்கம் வருவார்க்கு அருமையான குளிர்ந்த நிழலைத் தருவதுபோல், நற்பண்பு வாய்ந்தவர் பொருளிழப்புத் தமக்கு மிகுதியாக நேர்ந்தாலும் பிறர்க்கு நன்மையே செய்வர்.

 

சாடுதல்-மோதுதல். கேடு-பொருளிழப்பு. குணம்-பண்பு. பீடு-பெருமை.

 

20

 

பிறர்க்குதவி இன்பம் பெறுவர் மேலோர்

406
இதமிலா வுலோபர்தம் பொருளை யெண்ணியே
மதமொடு நாடொறு மகிழ்வர் மேலவர்
பதவிதீர் மிடியர்க்குப் பரிவிற் றாஞ்செயும்
உதவியை யுனுந்தொறும் உளங்க ளிப்பரே.
 

நன்மையில்லாத கடும்பற்றுள்ள இவறியர் நாள்தோறும் பயனில்லாத எண்ணிக்கைப் பெருக்கமுள்ள தம் பணத்தையே பெரிதாக நினைந்து செருக்குற்றுப் பொய்யின்ப மகிழ்ச்சி அடைவர். பிறர் நலம் பேணும் சான்றவர் நிலையில்லாத ஏழைகட்கு மிகுந்த அன்புடன் தாம் செய்யும் உதவியை நினைக்கும்பொழுதெல்லாம் மெய்யான உள்ளத்துவகை அடைவர்.

 இதம்-நன்மை. உலோபர்-இவறியர். மதம்-செருக்கு. பதவிதீர்-நிலையில்லாத. மிடியர்-வறியர். பரிவு-பேரன்பு. களிப்பு-உவகை.
 

21