பக்கம் எண் :

199

  யாக்கை நிலையாமை
 
 

 வேறு

 

பெற்றவை கொண்டு மனநிறைதல் பேரின்பம்

421
பறவையும் விலங்கும் தீனி பசித்தபின் தேடு நாளைக்
குறையெனுங் கவலை யில்லை உணவின்றி யிறந்த தில்லை
வறியரெம் மிற்பல் லோரிவ் வையகத் துளர்தே வீந்த
சிறிதுமே பெரிதென் றெண்ணிச் சிந்தையே மகிழ்ந்து கொள்ளே.
  உள்ளமே! புள்ளும் மாவும் துவரப் பசித்தபின் இரை தேடும். நாளைக்கு வேண்டுமே என்ற கவலையில்லை. தீனி இன்றி அவையும் மாண்டு போகவில்லை. இவ்வுலகத்துள் எம்மைக்காட்டிலும் ஏழைகள் பலரிருக்கின்றனர். (ஆதலா) தெய்வ அருளால் கிடைத்த சிறு பொருளைப் பெரிதென்று மனநிறைந்து உவகையுறுவாயாக.
  பறவை-புள். விலங்கு-மா. தீனி-இரை. தே-தெய்வம்.
 

14

  அதி. 40--யாக்கை நிலையாமை
  பொழுதுநாள் ஆண்டெனப் போகும் வாழ்நாள்
422
நெருநலோ வகன்றதின்று விடிந்துபக
   லாயிற்றுநிமிடந் தன்னில்
அருணனே யத்தமிப்ப னிசிவரும்பின்
   போமறுநா ளாமிவ் வண்ணம்
ஒருநாளாப் பலநாளாத் திங்களா
   வாண்டுகளா வுருவு கொண்டிங்கு
அருநாளா மாயுணாள் கழிவதனை*
   யுணராயோ அவல நெஞ்சே.
  துன்புறும் மனமே! நேற்றைப்பொழுது கழிந்தது. இன்று புலர்ந்து பகலாயிற்று. நொடிப்பொழுதில் ஞாயிறு மறையும். இரவு தோன்றும். பின் அவ்விரவும் மறையும் இரண்டாம் நாள் ஆகும். இப்படிப் பல நாட்கள் செல்ல மாதங்களும் ஆண்டுகளும் ஆக உருவு கொண்டு நம் வாழ்நாள் கழிவதனை உணர்வாயாக.
  நெருநல்-நேற்று. நிமிடம்-நொடிப்பொழுது; நொடி. அருணன்-ஞாயிறு. அத்தமிப்பன்-மறைவன். திங்கள்-மாதம். ஆயுள்நாள்-வாழ்நாள். அவலம்-துன்பம்.
 

1

 
*நாளென. திருக்குறள், 334