பக்கம் எண் :

23

 தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
 
 கடவுளை நினைக்க நினைக்க நேரும்பே ரின்பம்
29
முன்னவன் றனையு ளத்து முன்னமுன் னத்தெ விட்டாக்
கன்னலோ வமுதோ பாகோ கற்கண்டோ வெனத்தித் திக்கும்
இன்னன்மே வாத வன்றா னெங்கணு நிறைந்தி ருந்தும்
அன்னையை நீத்த சேய்போ லையனை நீத்தாய் நெஞ்சே.
 ஆண்டவனை நினைக்க நினைக்கக் கரும்பு, அமுது, வெல்லப்பாகு, கற்கண்டு முதலிய போன்று இனிக்கும். துன்பம் அணுகாது; எங்கும் நிறைந்த அவனைத் தாயை நீத்த சேய்போல் நெஞ்சமே நீத்தனையே.
 முன்ன-நினைக்க. தெவிட்டா-வெறுப்புத் தட்டா. கன்னல்-கரும்பு. இன்னல்-துன்பம். சேய்-பிள்ளை.
 

13

 கடவுளைத் தொழாது காலம் கழித்தல் நன்றன்று
30
ஆயுணாள் சிலவெங் காம மனந்தர்நோய் சோம்பு கொண்ட
காயமே வளர்க்க வென்னில் கருமங்கள் செயலிவ் வாறே
தேயுநாள் கழிய நிற்குஞ் சேடநா ளற்ப மாகுந்
தூயநா தனைத்தொ ழாமல் தொலைக்கின்றா யழியு நெஞ்சே.
 வாழ்நாள் மிகவும் சுருக்கம்; காமம். தூக்கம், நோய், மடி முதலியன நிறைந்த உடம்பு. இதை வளர்க்க வினைசெய்தல் வேண்டும். இப்படியே வாழ்நாள்கள் கழிந்து தேய்கின்றன. எஞ்சிய நாள் குறைவு; அந்த நாளையும் கடவுளைத் தொழாது தொலைக்கின்றாய் நெஞ்சமே.
 ஆயுள்-வாழ்நாள். அனந்தல்-தூக்கம். சேடம்-மிச்சம்.
 

14

 கடவுளை அகத்தில் காண்பதே காட்சி
31
பொங்கலை ஆழி தாண்டிப் பொருப்புகள் கடந்தோ யாமல்
அங்குமிங் குந்தி ரிந்தே யழிந்துபோ முடலைக் காப்பாய்
எங்கணு முள்ளோன் றாளுன் னிருக்கையி னிருந்து போற்றிப்
பங்கமில் சுகம்பெற் றுய்யப் பாரமென் பகராய் நெஞ்சே.
 நெஞ்சே அழிந்துபோம் உடலைக் கடல்தாண்டியும், மலை கடந்தும் எங்கும் திரிந்து காப்பாய். இருந்த இடமிருந்து ஆண்டவனைத்து தொழுபேரின்பமடைய வருத்த மென்னே?
 

15