பக்கம் எண் :

254

  நீதி நூல்
 
 

    வாய்பேசா விலங்கைக் கொல்வோன் வன்பேயாவன்  

518
மானிடர் துயரைச் சொல்வர்
    மற்றுளோ ரதனைத் தீர்ப்பர்
ஆனவ ருறுநோய் நீக்க
    வனந்தமாம் பரிகா ரங்கள்
மோனமா யிடுக்கண் டாங்கி
    முறையிட வறியா தல்லல்
தானுறு விலங்கைக் கொல்வோன்
    தருமனோ பேயோ வம்மா.
  மக்கள் தாங்கள் படும் துன்பத்தை வாய்விட்டுச் சொல்லுவர். அதனைக் கேட்ட பிறரும் நண்பரும் அதனைத் தீர்ப்பர். அதனைத் தீர்க்கும் வழிகளும் பல. வாய் பேசவறியாத விலங்கினங்கள் தங்கள் துன்பத்தைத் தாங்களே தாங்கி வருத்தமுறுகின்றன. அவற்றைக் கொல்வோன், நன்மை கைக்கொள்ளும் அறவோனோ? தீமையே புரியும் பேயோ?
  ஆனவர்-நண்பர். மோனம்-வாய் பேசாமை.
 

2

  ஊன்உண் பழக்கத்தால் உண்பர் மக்களையும்
519
கொடியவெவ் விலங்கை யெல்லாங்
    கோறலே முறையென் றாலும்
அடிமைபோல் நரர்க்கு ழைத்தீண்
    டயர்விலங் கினைமா சில்லாக்
குடிஞையை யடித்து தைத்துக்
    கொன்றுண் போர்சமயம் வாய்க்கில்
படியின்மக் களையு முண்பர்
    பழக்கம்போல் தீய துண்டோ.
  உயிர்க்கொலை செய்யும் கொடு விலங்குகளைக் கொல்வதே முறை. ஆயின், அடிமைபோல் மக்களுக்கு உழைத்து இளைக்கும் ஆடு மாடு முதலிய விலங்கினங்களையும் பறவைகளையும் அடித்துக்கொன்று உண்போர், வாய்ப்புக் கிடைத்தால் உலகத்தில் மக்களையும் கொன்று உண்பர். பழக்கம்போல் கொடியது உண்டோ?
  அயர்தல்-இளைத்தல். குடிஞை-பறவை.
 

3