பக்கம் எண் :

26

  அதி. 3. அரசியல்பு
  துன்பம் நீக்கி இன்பம் ஆக்குவோன் மன்னன்
37
எந்த வே ளையினும் நொந்தவர் துயர்கேட்
   டிடரிழைப் பவன்றன தேக
மைந்தனே யெனினும் வதைத்திட ஒல்கான்
   மாக்களின் சுகநல மன்றிச்
சிந்தனை மற்றோர் பொருளினில் செலுத்தான்
   தீமொழி கனவிலும் புகலான்
தந்தைபோல் தாய்போல் எவரையும் ஓம்புந்
   தன்மைய னேயிறை யன்றோ.
  குடிகளுக்குத் துன்பஞ் செய்வோன் தன் ஒருமகனாக விருப்பினும் தண்டிப்பவனும், குடிகள் நலமே எண்ணுபவனும் கடுமொழியில்லாதவனும், தந்தைதாய்போல் பேணுபவனும் மன்னனாவான்.
  ஓம்பல்-பேணல்.
 

1

  மன்னுயிர் எல்லாம் தன்னுயிரா மதிப்போன் மன்னன்
38
மன்னுயி ரனைத்துந் தன்னுயி ரென்ன
   மகிழ்வொடு தாங்கியா ரேனும்
இன்னலுற் றயர்ந்தோ மெனக்கலுழ்ந் திடில்தன்
   இருவிழி நீரினை உகுப்பான்
அன்னவெந் துயரை நீக்குமுன் தானொன்று
   அயின்றிடான் துயின்றிடான் எவரும்
நன்னக ரெங்கும் உளனெனப் பகர
   நாடொறும் இயங்குவோன் கோனே..
  எல்லா உயிரும் தன் உயிர்போல் காத்துப், பிறர் துன்பம் கண்டால் கண்ணீர்விட்டு, அத்துன்பம் நீக்கும் வரை ஊண் உறக்கமின்றி நகரெங்கும் காணும்படி வருவோன் மன்னன்.
  இன்னல்-துன்பம். அயின்றிடல்-உண்டல்.
 

2