பக்கம் எண் :

271

  தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
 
  ஒன்பது வாயில்கள் அமைத்துத் தோலாகிய கூரைவேய்ந்து ஆவிக்குப் பெருமை எய்தும்படி யாக்கை ஒன்று அமைத்தருளினன்.
  கொன்-வலிமை. குருதி-இரத்தம். எழீஇ-எழுப்பி. ஒன்பது வாயில்-கண்ணிரண்டு, காதிரண்டு, மூக்கிரண்டு, வாய் ஒன்று, எருவாய் ஒன்று, கருவாய் ஒன்று. உரி-தோல்.
 

6

  கருவின்றி உலகாக்கிக் காப்போன் கடவுள்
549
மணலொன்றான் மலைசெய் வோனை
    நோக்கிடின் மாவி யப்பாம்
அணுவொன்று மில்லா தண்ட
    மனைத்துஞ்செய் திருந்தே கங்கள்
துணையில்சுக் கிலவி ரத்தச்
    சிறுதுளி யான மைத்துப்
புணர்சிறு வித்தாற் பார
    மரமெலாம் புரிந்தோன் தேவே.
  மணலைக் கொண்டு மலையொன்று ஒருவன் உண்டாக்குவானாயின் பெரு வியப்புக்கொள்வோம். அணுவாம் பருப்பொருள் ஏதுமிலாது அளவிலாத உலகங்களையும், ஒப்பில்லாத வெண்ணீர் செந்நீரால் ஆகும் எறும்பு முதல் யானை ஈறாகிய பல்வேறு உடம்புகளையும், நுண்ணிய விதையால் பெரிய ஆலமரம் போன்ற பல மரங்களையும் திருவுள்ளத்தால் படைத்தருளிய செம்பொருள் முழுமுதல் தெய்வமாகும்.
  வியப்பு-மருட்சி; அதிசயம். துணையில்-ஒப்பில்லாத.
 

7

  ஞாயிற்றை நடுநிலையில் நாட்டினோன் கடவுள்
550
பகல்புவி யினும்பல் கோடி பங்குமிக் கதுவாம் பூமிக்கு
இகலணித் தாயின் யாவும் எரிந்துபோஞ் சேணா யிற்பார்
தகவொளி பெறாதென் றுன்னித் தக்ககண் நிறுவிச் சுற்றும்
நிகழ்புவ னங்கள் காந்தி யுறச்செய்தோ னிகரி லானால்.
  ஞாயிறு உலகத்தைவிடப் பலகோடி மடங்கு பெரியது; அஃது, உலகத்துக்கு நெருங்கியிருக்குமாயின் உலகம் எரிந்து பாழாய்ப்போகும். தொலைவிலிருப்பின் அதன் ஒளியும் சூடும் பெறாது உலகம் நிலைபேறின்றிக் கெடும். இவற்றைத் திருவுள்