பக்கம் எண் :

28

  நீதிநூல்
 
  நெறிமுறை நடந்து நடத்துவோன் நீள்மன்னன்
41
தானினி தியற்று மனுநெறிப் படிமுன்
   றானடந் தறவழிகாட்டி
ஞானநற் குணத்தின் மேன்மையா லெவர்க்கு
   நாயகந் தானெனத் தெரித்துத்
தானமுந் தயையு மெய்ம்மையுந் தவமுந்
   தற்பரன் வணக்கமும் பொறையு
மானமு மிகுத்து நரரெலாஞ் செழிக்க
   மகிழர சளிப்பவன் மன்னே.
  முறைதவிராமல் தான் நடந்து குடிகளையும் நடத்துவோன், நல் அறிவாலும் நற்பண்பாலும் எல்லாருக்குந் தலைவனாவோன், தானம், கண்ணோட்டம், மெய்ம்மை தவம் , தெய்வ வணக்கம், பொறுமை, மானம் முதலியன இயல்பாய் அமைந்து, மக்கள் எல்லாம் செழிப்புடன் மகிழ்வுற ஆள்வோன் வேந்தன்.
  தயை-கண்ணோட்டம்.
 

5

  வாய்ப்பெல்லாம் இயற்றி ஆள்வோன் மன்னன்
42
சத்திரஞ்சோலை சாலைகள் குளங்க டண்ணதி
   மதகொடா லயங்கள்
வித்தியாசாலை மாடகூ டங்கள் வேறுவே
   றமைத்துவே ளாண்மை
சத்திய மகலா வாணிக மாதி சகலநற்
   றொழிலவ ரவர்கள்
நித்திய முயல வித்திசை புரக்கு நிருபனே
   நிருபனா மன்றோ.
  ஊட்டுப்புரையும், பூங்காவும், சாலை, குளம், யாறு, மடை, கோவில், கல்லூரிகளும், மாடகூடங்களும் வெவ்வேறமைத்து வேளாண்மை, வாணிபம், கைத்தொழில் நாளும் பெருக வேண்டுவன செய்து காப்போன் வேந்தன்.
  சத்திரம்-ஊட்டுப்புரை (தங்குமிடம்) புரத்தல்-காத்தல். நிருபன்-வேந்தன்
 

6