பக்கம் எண் :

282

  நீதி நூல்
 
 

       எல்லாப் பொழுதினும் இறையை எண்ணுக

570
உண்ணும்வே லையினு மல்லி
    னுறங்கும்வே லையினும் வேலை
பண்ணும்வே லையினுந் துன்பம்
    படரும்வே லையினு மின்ப
நண்ணும்வே லையினும் பாரில்
    நடக்கும்வே லையினு மொன்றைக்
கண்ணும்வே லையினுந் தேவைக்
    கண்ணும்வே லையைச்செய் நெஞ்சே.
  மனமே! உண்ணுங்காலத்தும், இரவு உறங்குங்காலத்தும், உழைக்குங்காலத்தும், துன்பப்படும் பொழுதும், இன்பம் துய்க்குங் காலத்தும், நிலத்தே நடக்கும்பொழுதும், ஒன்றனைக் கருத்தூன்றி நினைக்கும்போதும் ஆண்டவனை மறவாது அன்புடன் நினைப்பாயாக.
  வேலை-பொழுது. பண்ணல்-செய்தல். படரல்-உண்டாதல். பார்-நிலம். கண்ணல்-கருதல். தேவு-ஆண்டவன்.
  எல்லாம் அறியும் இயல்பினன் கடவுள்
571
தினையினும் புகுந்து நிற்குந்
    தெய்வநா யகன்றான் யாவர்
நினைவையு மறிவான் யாங்க
    ணிகழ்வது மறிவான் செய்யும்
வினையையு மறிவான் பேசும்
    விதங்களு மறிவா னன்பார்
அனையனை யனைய லாதோ
    ரணுவுமே யசையுங் கொல்லோ.
  மிகச் சிறிய பொருளிலும் அகம்புறம் விரவி நீற்கும் யாவர்க்கும் மேலாம் முழுமுதல் தெய்வத் தலைவன், எல்லார் நினைவையும் இம்மியும் பிசகாது அறிவன். எவ்விடத்து என்ன நிகழினும் அறிவன். யார் வெளிப்பட்டும் மறைந்தும் என்ன செய்யினும் அறிவன். மறைவாக என்ன பேசினும் அறிவன். அன்பு நிறைந்த தாயையொத்த தண்ணளி வாய்ந்த கடவுளை அல்லாது