பக்கம் எண் :

295

  அதி. 4--குடிகளியல்பு
 

       இறைப்பணத்தால் குடிகளே இன்பம் எய்துவர்

592
வேருறுநீர் மரமெங்கும் விரவுமுத ரங்கொள்சுவை
யாருணவு தேகமெலா மண்ணுறுங்கோன் கொள்ளுமிறை
பாருயிர்க் கெலாம்பின்பு பயன் படலாற் றகும்பருவத்து
ஏருறவே தக்கவிறை யினிதீவர் குடிகளரோ.
  பெருமரத்தின் தூரில் விடுநீர், வேரின்வழி மரமெங்கணும் விரவி, அம்மரத்தைச் செழிக்கச் செய்யும். வாய்வழியாக வயிற்றினுட் செல்லும் சுவை நிறைந்த உணவு, குருதியாக மாறி உடம்பெங்கணும் சென்று, அவ்வுடம்பினை அழகுற வளர்க்கும். அவை போல் வேந்தன் பெறும் வரிப்பொருளால் குடிமக்களுக்கு வேண்டும் நீர்நிலை, வழிநடை, ஊர்தி, அஞ்சல், கல்வி, மருந்து, ஒழுக்கம், கடவுள் நினைவு, அச்சமின்மை, அன்பின்பவாழ்க்கை, காவல் முதலிய பலவகைத் துறைகள் வழியாகப் பயனீந்து இம்மையே நன்மை தரும் எல்லா இன்பமும் எய்துவிக்கும். அதனால் முறை தவிரா இறைப்பொருளை ஒருங்கு நேர்ந்து உவந்து ஈவர்.
  மண்ணுறும்-அழகு செய்யும். இறை-வரிப்பொருள்..
 

1

  உயிராம் வேந்தை உள்ளன்புடன் காப்பர்
593
தருவினொடு கிளைகளுஞ்சார் வல்லியுஞ்சாய்ந் தழிதலெனப்
பெருமகனோ ரிடரெய்திற் பிழைக்கும்வகை பிறர்க்குண்டோ
மருவலரான் மற்றொன்றான் மகிபனயர் வெய்தாமல்
ஒருமையொடு மன்னானை யுயர்குடிக ளோம்புவரால்.
  பழுதுபட்டுப் பெருமரம் சாயநேரின் அம்மரத்தின் கிளைகளும் அம்மரத்தினைச் சார்ந்த கொடிகளும் கூடச்சாய்ந்து அழியும். அதுபோல், மலர்தலை யுலகுக்கு உயிரென விளங்குவ நெல்லும் நீருமாகும். அவ்விரண்டும் வேந்தன் காவல் இல்லையாயின் விளைக்கவோ, வீட்டில் கொண்டுவந்து தொகுக்கவோ, தொகுத்தவற்றை ஆக்கவோ, ஆக்கியவற்றை அமைதியாக இருந்து மக்கள் ஒக்கல் விருந்து முதலானவருடன் தக்கவாறுண்ணவோ, உழைக்கவோ, உலாவவோ, உறங்கவோ, அறம் பல புரிந்து வாழவோ எத்திறத்தார்க்கும் முடியா. ஆயின், வேந்தனே மாந்தர்க்கு வாய்மை உயிராவன். அவன் எவ்வகை