பக்கம் எண் :

302

  நீதி நூல்
 
 

தொழுதுணர்த்தி மக்களைத் தொழுதுழைக்கச் செய்க

603
முத்தொழிற் பரற்றொழு முறையு மன்னவன்
கைத்தொழிற் பொருளிலக் கணமுந் தத்தமக்
கெத்தொழி லெவ்வொழுக் கியைந்த வாகுமோ
வத்தொழில் வண்மையு மறைக பாலர்க்கே.
  இறைவனைத் தொழுது இன்பமுறும் மக்கட் பெற்ற ஈன்றோர்களே! உங்கள் மக்கட்குப் படைத்தல். காத்தல், துடைத்தல் ஆகிய முத்தொழில்களைச் செய்வித்தருளும் முழுமுதல்வனை நாற்பொருளும் நன்கினிது கைகூட முறையே காலை நண்பகல் மாலை நள்ளிரவு என்னும் நான்கு வேளைகளிலும் தவிராது கண்ணல், வாழ்த்தல், கைகூப்பல் என்னும் தொழுகையினைச் செய்யுமாறு தொழுது காட்டிக் கற்பிப்பீர்களாக. ஆண்டவன் ஆக்காது ஆக்கியருளிய உலகியற் பொருள்களின் தன்மைகளை உள்ளவாறு எடுத்து விளக்குவீர்களாக. அதன்வழி ஆண்டவன் அருள்திறம் அம்மக்கள் உள்ளத்தில் அழுத்தமாய்ப் பதியும். அம் மக்களுடைய முற்பிறப்பின் பழக்க வலியால் வளர்ந்து விளங்கும் இயற்கை அறிவுக்கியைந்தவாறு தொழில்களையும் நடைமுறைகளையும் மேற்கொள்ளுமாறும் அத்தொழில்களின் வளங்களையும் அறிவித்து முயற்சியில் முற்படுத்துவீர்களாக.
  முத்தொழில்-படைத்தல், காத்தல், துடைத்தல், பரன்-கடவுள். தொழுகை-வணக்கம்; பூசை. இலக்கணம்-தன்மை. வண்மை-வளர்ப்பம். அறைக-சொல்லுக.
 

3

  வேறு
  கல்லாதார் செய்குற்றம் ஈன்றாரைக் கட்டுறுத்தும்
604
பச்சைமண் கொடுநி னைத்த படிபல கலஞ்செய் வார்போல்
விச்சையு மறமு மூப்பு மேவுமுன் தம்ம கார்க்குப்
பிச்சைகொண் டெனினும் ஓதல் பெற்றவர் கடனா மன்றேல்
இச்சைசேர் பழிபா வங்க ளீன்றவர்க் கெய்து மாலோ.
  மாந்தர் விரும்பியவாறு பல்வேறு மட்கலங்களைச் செய்யும் வேட்கோவாகிய குயவன் பச்சை மண்ணைக் கொண்டுவந்தே கலங்களைச் செய்வான். அதுபோல், பிள்ளைகளைப் பெற்று வளர்க்கும் தாய்தந்தையர், அப்பிள்ளைகளின் இளமைக்காலத்தே அவர்களை நற்கல்வியும் நல்லொழுக்கமும் பொருந்திய நயனுடை