பக்கம் எண் :

54

  அதி. 10 - உடன் பிறந்தாரியல்பு
  உடன்பிறந் தார்க்குத் தந்தைதாய் வீடொன்றே
104
தந்தைதா யொருவர் தம்மைத் தாங்கிய
   வுதர மொன்று
முந்தவின் பால ருந்து முலையொன்று
   வளரு மில்லொன்று
இந்தவா றெல்லா மொன்றா யியைந்தசோ
   தரரன் புற்றுச்
சிந்தையு மொன்றிப் பாலுந் தேனும்போல்
   விளங்கல் நன்றே.
 

ஒரு வயிற்றுத் தோன்றிய உடன் பிறந்தார்க்குத் தந்தை தாயர் ஒருவர்; ஈன்ற வயிறும் ஒன்று; பருகிய இனிய பாலும் ஒன்று; வளரும் வீடும் ஒன்று. இவ்வாறெல்லாம் பலவும் ஒன்றாக யமைந்த உடன் பிறந்தார், அன்பு பூண்டு உள்ளமும் பொருந்திப் பாலும் தேனும்போல் விளங்குவது நன்மையாம்.

 

உதரம்-வயிறு. சோதரர்-உடன் பிறந்தார். சிந்தை-உள்ளம்.

 

1

  எல்லோரும் உடன்பிறப்பேல் இயைந்தாருக் களவெவன்
105
ஆதரை மிசைநர ராய யாவருஞ்
சோதர ரெனமிகத் துன்னல் நன்றென
வேதமே யோதுமால் விளக்குஞ் சோதரர்
மீதமை நட்பினை விளம்பல் வேண்டுமோ.
  உலகத்தில் மக்களாய்த் தோன்றியவர்கள் எல்லோரும் உடன்பிறந்தாராய் ஒற்றுமையுடன் வாழ்தல் நன்றென்று மறைநூல் சொல்லும். ஆயின் ஒருதாய் வயிற்றுப்பிறந்த உடன் பிறந்தார் அன்பும் ஒற்றுமையும் கொண்டு வாழவேண்டும் பொறுப்பைக் கூறவும் வேண்டுமோ?
  நரர்-மக்கள். துன்னல்-நெருங்கல், ஒற்றுமை. விளம்பல்-சொல்லல்.
 

2