பக்கம் எண் :

114சித்தர் பாடல்கள்

அருளுடையோரைத் தவத்திற்குணத்தில் அருளிலன்பில்
இருளறு சொல்லிலுங் காணத்தகுங்கச்சி ஏகம்பனே.
15
  
பருத்திப்பொதியினைப் போலவேவயிறு பருக்கத்தங்கள்
துறுத்திக் கறுசுவை போடுகின்றார் துறந் தோர்தமக்கு
வருத்திஅமுதிட மாட்டாரவரை இம்மானிலத்தில்
இருத்திக்கொண் டேனிருந்தா இறைவாகச்சி ஏகம்பனே.
16
  
பொல்லாஇருளகற் றுங்கதிர்கூகையென் புட்கண்ணினுக்கு
அல்லாயிருந்திடும் ஆறொக்குமேஅறி வோருள்ளத்தில்
வல்லாரறிவார் அறியார்தமக்கு மயக்கங்கண்டாய்
எல்லாம் விழிமயக்கே இறைவாகச்சி ஏகம்பனே.
17
  
வாதுக்குச்சண்டைக்குப் போவார்வருவார் வழக்குரைப்பார்
தீதுக்குதவியுஞ் செய்திடுவார்தினந் தேடியொன்றும்
மாதுக்களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார் இறைவாகச்சி ஏகம்பனே.
18
  
ஓயாமற் பொய்சொல்வர் நல்லோரைநிந்திப்பர் உற்றுப்பெற்ற
தாயாரைவைவர் சதியாயிரஞ்செய்வர் சாத்திரங்கள்
ஆயார்பிறர்க்கு உபகாரஞ்செய்யார்தமை அண்டினர்க்கொன்று
ஈயாரிருந்தென்ன போயென்ன காண்கச்சி ஏகம்பனே.
19
  
அப்பென்றும் வெண்மையதாயினும் ஆங்கந்நிலத் தியல்பாய்த்
தப்பின்றி யேகுண வேற்றுமைதான் பல சார்தலினால்
செப்பில் அபக்குவம் பக்குவமாயுள்ள சீவரிலும்
இப்படியேநிற்பன் எந்தை பிரான்கச்சி ஏகம்பனே.
20
  
நாயாய்ப்பிறந்திடின் நல்வேட்டையாடி நயம்புரியும்
தாயார்வயிற்றில் நரராய்ப் பிறந்துபின் சம்பன்னராய்க்
காயாமரமும் வறளாங் குளமுங் கல்லாவு மன்ன
ஈயாமனிதரை ஏன்படைத்தாய் கச்சி ஏகம்பனே.
21
  
ஆற்றிற்கரைத்த புளியாக்கி டாமலென் அன்பையெல்லாம்
போற்றித் திருவுளம் பற்றுமை யாபுர மூன்றெரித்துக்
கூற்றைப் பணிகொளுந் தாளுடையாய் குன்ற வில்லுடையாய்
ஏற்றுக் கொடியுடையாய் இறைவாகச்சி ஏகம்பனே.
22