பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்117


பொன்னை நினைந்து வெகுவாகத் தேடுவர் பூவையன்னாள்
தன்னைநினைந்து வெகுவாய்உருகுவர் தாரணியில்
உன்னை நினைந்திங் குனைப்பூசி யாத உலுத்தரெல்லாம்
என்னை இருந்துகண்டாய் இறைவாகச்சி ஏகம்பனே.
38
  
கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக் குண்டரைக் காமுகரைக்
கொடும் பவமேசெயும் நிர்மூடர்தம்மைக் குவலயத்து
நெடும்பனைபோல் வளர்ந்துநல் லோர் தம் நெறியறியா
இடும்பரை யேன்வகுத்தாய் இறைவாகச்சி ஏகம்பனே.
39
  
கொன்றேன் அனேகம் உயிரையெலாம் பின்புகொன்றுகொன்று
தின்றேன் அதன்றியும் தீங்குசெய்தேனது தீர்க வென்றே
நின்றேனின் சன்னிதிக்கேஅத னாற்குற்றம் நீபொறுப்பாய்
என்றேஉனைநம்பினேன் இறைவாகச்சி ஏகம்பனே.
40
  
ஊரிருந் தென்ன நல்லோரிருந்தென் னுபகாரமுள்ள
பேரிருந் தென்பெற்ற தாயிருந்தென்மடப் பெண்கொடியாள்
சீரிருந்த தென்னற் சிறப்பிருந் தென்னவித் தேயத்தினில்
ஏரிருந் தென்னவல்லாய் இறைவாகச்சி ஏகம்பனே.
41
  
வில்லா லடிக்கச் செருப்பா லுதைக்க வெகுண்டொருவன்
கல்லா லெறியப் பிரம்பா லடிக்கக் களிவண்டுகூர்ந்து
அல்லாற் பொழிற்றில்லை அம்பலவாணர்க்கோர் அன்னைபிதா
இல்லாத தாலல்லவோ இறைவாகச்சி ஏகம்பனே.
42
  
            எண்சீர் விருத்தம்

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
     அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பிள்ளை எத்தனை எத்தனை பெண்டிரோ
     பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
     மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
     என்செய்வேன்கச்சி ஏகம்ப நாதனே
43