பக்கம் எண் :

118சித்தர் பாடல்கள்

                     திருத் தில்லை

காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங்
                                      காசினிக்கும்
தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் தனித்துச் செத்துப்
போம்பிணந் தன்னைத் திரளாகக் கூடிப் புரண்டு இனிமேற்
சாம்பிணங் கத்துது ஐயோ! என் செய்வேன் தில்லைச் சங்கரனே!



1
  
சோறிடும் நாடு, துணிதருங் குப்பை, தொண்டன் பரைக்கண்டு
ஏறிடுங் கைகள் இறங்கிடுந் தீவினை, எப்பொழுதும்
நீறிடும் மேனியர் சிற்றம் பலவர் நிருத்தங்கண்டால்
ஊறிடும் கண்கள் உருகிடும் நெஞ்சம்என் உள்ளமுமே!
2
  
அழலுக்குள் வெண்ணெய் எனவே உருகிப்பொன் னம்பலத்தார்
நிழலுக்குள் நின்று தவமுற் றாமல்நிட் டூரமின்னார்
குழலுக் கிசைந்த வகைமாலை கொண்டுகுற் றேவல்செய்து
விழலுக்கு முத்துலை இட்டிறைத் தேன் என் விதிவசமே.
3
  
ஓடாமல் பாழுக்கு உழையாமல் ஓரம் உரைப்பவர்பால்
கூடாமல் நல்லவர் கூட்டம் விடாமல்வெங் கோபம் நெஞ்சில்
நாடாமல் நன்மை வழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று
தேடாமல் செல்வம் தருவாய்! சிதம்பர தேசிகனே!
4
  
பாராமல் ஏற்பவர்க்கு இல்லையென் னாமல் பழுதுசொல்லி
வாராமல் பாவங்கள் வந்தணு காமல் மனம் அயர்ந்து
பேராமல், சேவை பிரியாமல் அன்புபெ றாதவரைச்
சேராமல் செல்வம் தருவாய்! சிதம்பர தேசிகனே!
5
  
கொல்லாமல், கொன்றதைத் தின்னாமல், குத்திரங் கோள்களவு
கல்லாமல், கைதவ ரோடுஇணங் காமல்கனவி னும்பொய்
சொல்லாமல், சொற்களைக் கேளாமல், தோகையர் மாயையிலே
செல்லாமல், செல்வந் தருவாய் சிதம்பர தேசிகனே!
6
  
முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லால்பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம்உய்ய வேண்டுமென்றே அறி வாரில்லையே!
7