திருத் தில்லை காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும் தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் தனித்துச் செத்துப் போம்பிணந் தன்னைத் திரளாகக் கூடிப் புரண்டு இனிமேற் சாம்பிணங் கத்துது ஐயோ! என் செய்வேன் தில்லைச் சங்கரனே! | 1 |
| | |
சோறிடும் நாடு, துணிதருங் குப்பை, தொண்டன் பரைக்கண்டு ஏறிடுங் கைகள் இறங்கிடுந் தீவினை, எப்பொழுதும் நீறிடும் மேனியர் சிற்றம் பலவர் நிருத்தங்கண்டால் ஊறிடும் கண்கள் உருகிடும் நெஞ்சம்என் உள்ளமுமே! | 2 |
| | |
அழலுக்குள் வெண்ணெய் எனவே உருகிப்பொன் னம்பலத்தார் நிழலுக்குள் நின்று தவமுற் றாமல்நிட் டூரமின்னார் குழலுக் கிசைந்த வகைமாலை கொண்டுகுற் றேவல்செய்து விழலுக்கு முத்துலை இட்டிறைத் தேன் என் விதிவசமே. | 3 |
| | |
ஓடாமல் பாழுக்கு உழையாமல் ஓரம் உரைப்பவர்பால் கூடாமல் நல்லவர் கூட்டம் விடாமல்வெங் கோபம் நெஞ்சில் நாடாமல் நன்மை வழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று தேடாமல் செல்வம் தருவாய்! சிதம்பர தேசிகனே! | 4 |
| | |
பாராமல் ஏற்பவர்க்கு இல்லையென் னாமல் பழுதுசொல்லி வாராமல் பாவங்கள் வந்தணு காமல் மனம் அயர்ந்து பேராமல், சேவை பிரியாமல் அன்புபெ றாதவரைச் சேராமல் செல்வம் தருவாய்! சிதம்பர தேசிகனே! | 5 |
| | |
கொல்லாமல், கொன்றதைத் தின்னாமல், குத்திரங் கோள்களவு கல்லாமல், கைதவ ரோடுஇணங் காமல்கனவி னும்பொய் சொல்லாமல், சொற்களைக் கேளாமல், தோகையர் மாயையிலே செல்லாமல், செல்வந் தருவாய் சிதம்பர தேசிகனே! | 6 |
| | |
முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னும் இந்தப் படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லால்பொன்னின் அம்பலவர் அடிசார்ந்து நாம்உய்ய வேண்டுமென்றே அறி வாரில்லையே! | 7 |