பக்கம் எண் :

126சித்தர் பாடல்கள்

 ஈயும் எறும்பும் புகுகின்ற யோனிக்கு இரவுபகல்
மாயும் மனிதரை மாயாமல் வைக்கமருந்தில்லையே !
  
15.சீதப் பனிக்குண்டு சிக்கெனக் கந்தை; தினம் இரந்து
நீ துய்க்கச் சோறு மனைதோறும் உண்டு, நினைவெழுந்தால்
வீதிக்கு நல்ல விலைமாதர் உண்டு; இந்த மேதினியில்
ஏதுக்கு நீசலித்தாய் மனமே என்றும் புண்படவே?
  
16.ஆறுண்டு; தோப்புண்டு; அணிவீதி அம்பலம் தானு முண்டு;
நீறுண்டு; கந்தை நெடுங்கோ வணமுண்டு; நித்தம் நித்தம்
மாறுண்டு உலாவி மயங்கும் நெஞ்சே! மனைதோறும் சென்று
சோறுண்டு தூங்கிப் பின் சும்மா இருக்கச் சுகமும் உண்டே!
  
17.உடுக்கக் கவிக்கக் குளிர்காற்று வெய்யில் ஒடுங்கி வந்தால்
தடுக்கப் பழையவொரு வேட்டியுண்டு; சகம் முழுதும்
படுக்கப் புறந்திண்ணை யெங்கெங்கு முண்டு; பசித்து வந்தால்
கொடுக்கச் சிவனுண்டு; நெஞ்சே! நமக்குக் குறைவில்லையே!
  
18.மாடுண்டு; கன்றுண்டு; மக்களுண்டு என்று மகிழ்வதெல்லாம்
கேடுண்டு எனும்படி கேட்டு விட்டோம் இனிக் கேள்மனமே!
ஓடுண்டு; கந்தையுண் டுள்ளேயெழுத் தைந்தும் ஓதவுண்டு
தோடுண்ட கண்டன் அடியார் நமக்குத் துணையு முண்டே!
  
19.மாத்தா னவத்தையும் மாயா புரியின் மயக்கத்தையும்
நீத்தார் தமக்கொரு நிட்டையுண்டோ? நித்தன் அன்பு கொண்டு
வேர்த்தால் குளித்துப் பசித்தால் புசித்து விழி துயின்று
பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே !
  
20.ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கே உபதேச மிதே.
  
21.நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்பு பொம்மல்
ஆட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்த சந்தைக்
கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்கு உபதேசமிதே !