பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்129


 சடக்கே கருவி தளர்ந்துவிட்டார் பெற்ற தாயுந்தொடாத்
தொடக்கே உனைச்சுமந் தேன் நின்னின் ஏது சுகமெனக்கே?
  
37.அழுதால் பயனென்ன? நொந்தால் பயனென்ன? ஆவதில்லை
தொழுதால் பயனென்ன? நின்னை ஒருவர் சுடவுரைத்த
பழுதால் பயனென்ன? நன்மையும் தீமையும் பங்கயத் தோன்
எழுதாப்படி வருமோ? சலியாதுஇரு என்ஏழை நெஞ்சே !
  
38.செல்வரைப் பின்சென் றுபசாரம் பேசித் தினந்தினமும்
பல்லினைக் காட்டி பரிதவி யாமல் பரமா னந்தத்தின்
எல்லையில் புக்குநல் ஏகாந்த மாய் எனக் காமிடத்தே
அல்லல் அற்றுஎன்றிருப் பேன் ஆலநீழல் அரும் பொருளே !
  
39.ஊரீர் உமக்கோர் உபதேசம் கேளும் உடம் படங்கப்
போரீர் சமனைக் கழுவேற்று நீற்றைப் புறந்திண்ணையில்
சாரீர் அனந்தலைச் சுற்றத்தை நீங்கிச் சகம்நகைக்க
ஏரீர் உமக்கு அவர் தாமே தருவர் இணையடியே !
  
40.நீற்றைப் புனைந்தென்ன? நீராடப் போயென்ன? நீ மனமே
மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல்
ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்?
ஆற்றில் கிடந்தும் துறையறி யாமல் அலைகின்றையே !
  
41.ஓங்கார மாய்நின்ற வத்துவி லேஒரு வித்துவந்து
பாங்காய் முளைத்த பயன் அறிந்தால் பதி னாலுலகும்
நீங்காமல் நீங்கி நிறையாய் நிறைந்து நிறையுருவாய்
ஆங்கார மானவர்க் கெட்டாக் கனிவந் தமர்ந்திடுமே.
  
42.விதியார் படைப்பும் அரியார் அளிப்பும் வியன் கயிலைப்
பதியார் துடைப்பும் நம் பால் அணுகாது பரமானந்தமே
கதியாகக் கொண்டுமற் றெல்லாம் துயிலில் கனவென நீ
மதியா திருமன மே இது காண் நல் மருந்துனக்கே !
  
43.நாய்க்குண்டு தெண்டு நமக்குண்டு பிச்சை நமனைவெல்ல
வாய்க்குண்டு மந்திர பஞ்சாட் சரம் மதி யாமல்வரும்
பேய்க்குண்டு நீறு திகைப்புண்டு நின்ற பிறவிப்பிணி
நோய்க்குண்டு தேசிகன் தன் அருள் நோக்கங்கள்
                                     நோக்குதற்கே !