பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்367


இருக்கலாம். சித்த மருத்துவ முறையை வகுத்தவர்களில் இவர் தலையானவர்
எனவும்,  ஆயுர்வேத  சூத்திரங்களுக்கு  இவர் விரிவுரை எழுதியிருக்கிறார்
எனவும் கூறுவர்.

ஞானம் - 1

எண்சீர் விருத்தம்

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
     சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்
     பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு;
பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார்
     பாழிலே மனத்தை விடார் பரம ஞானி;
சுத்தியே யலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம்
     சுழியிலே நிலையறிந்தால் மோட்சந் தானே.

1
  
மோட்சமது பெறுவ தற்குச் சூட்சஞ் சொன்னேன்
     மோசமுடன் பொய்களவு கொலை செய்யாதே;
காய்ச்சலுடன் கோபத்தைத் தள்ளிப் போடு
     காசினியிற் புண்ணியத்தைக் கருதிக் கொள்ளு;
பாய்ச்சலது பாயாதே பாழ்போ காதே
     பலவேத சாஸ்திரமும் பாரு பாரு;
ஏச்சலில்லா தவர்பிழைக்கச் செய்த மார்க்கம்
     என்மக்கா ளெண்ணி யெண்ணிப் பாரீர் நீரே.
2
  
பாரப்பா நால்வேதம் நாலும் பாரு
     பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி;
வீரப்பா ஒன்றொன்றுக்கு கொன்றை மாறி
     வீணிலே யவர்பிழைக்கச் செய்த மார்க்கம்;
தேரப்பா தெருத்தெருவே புலம்பு வார்கள்
     தெய்வநிலை ஒருவருமே காணார் காணார்;
ஆரப்பா நிலைநிற்கப் போறா ரையோ!
     ஆச்சரியங் கோடியிலே யொருவன் தானே!
3