பக்கம் எண் :

368சித்தர் பாடல்கள்

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
     உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும்;
பருவமதிற் சேறுபயிர் செய்ய வேணும்
     பாழிலே மனத்தை விடான் பரம ஞானி;
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி
     தேசத்திற் கள்ளரப்பா கோடா கோடி;
வருவார்க ளப்பனே அனேகங் கோடி
     வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே.
4
  
தானென்ற தானேதா னொன்றே தெய்வம்
     தகப்பனுந் தாயுமங்கே புணரும்போது
நானென்று கருப்பிடித்துக் கொண்டு வந்த
     நாதனைநீ எந்நாளும் வணங்கி நில்லு;
கோனென்ற திருடனுக்குந் தெரியு மப்பா
     கோடானு கோடியிலே யொருவ னுண்டு,
ஏனென்றே மனத்தாலே யறிய வேணும்
     என்மக்காள் நிலைநிற்க மோட்சந் தானே.
5
  
மோட்சமது பெறுவதற்குச் சூட்சங் கேளு
     முன்செய்த பேர்களுடன் குறியைக் கேளு!
ஏய்ச்சலது குருக்களது குலங்கள்கேளு
     எல்லாருங் கூடழிந்த தெங்கே கேளு;
பேச்சலது மாய்கையப்பா வொன்று மில்லை
     பிதற்றுவா ரவரவரும் நிலையுங்காணார்;
கூச்சலது பாளையந்தான் போகும் போது
     கூட்டோடே போச்சுதப்பா மூச்சுத் தானே.
6
  
மூச்சொடுங்கிப் போனவிடம் ஆருங் காணார்
     மோட்சத்தின் நரகாதி யிருப்புங் காணார்;
வாச்சென்றே வந்தவழி யேற்றங் காணார்
     வளிமாறி நிற்குமணி வழியுங் காணார்;
வீச்சப்பா வெட்டவெளி நன்றாய்ப் பாரு
     வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய்ப் போச்சே;
ஆச்சப்பா கருவுதனில் அமைந்தாற் போலாம்
     அவனுக்கே தெரியுமல்லா லறிவாய்ப் பாரே;
7