பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்459


காணப்பா தலமெல்லாம் அண்ட வுச்சி
     கமலமடா பதினெட்டாங் கோட்டிற் சென்று
பூணப்பா மனத்தையுந்தான் பிசகொட் டாமற்
     பூட்டடா பிரமத்திற் புகுந்தெந் நாளும்
வீணப்பா மந்திரங்க ளொன்று மில்லை
     விதியில்லை மதியில்லை கெதியு மில்லை
தோணப்பா தோணுமடா மனமொன் றான
     சுத்தமுடன் நீயிருந்து தவஞ்செய் வாயே.
4
  
செய்யப்பா வாசிமுனி மகனே கேளு
     தீர்க்கமுடன் முன்னுரைத்த ஆயி ரத்தில்
மெய்யப்பா சரக்குநீத் துவகை யெல்லாம்
     மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கி னங்கள்
பொய்யப்பா சொல்லவில்லை ரத்னப் போக்குப்
     புனிதமுடன் சரியாகச் சொல்லிப் போட்டேன்
வையப்பா இந்நூலில் மவுன மெல்லாம்
     வகையாகச் சொல்லுகிறேன் பணிந்து கேளே.
5
  
கேளப்பா கேசரமே அண்ட வுச்சி
     கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுன மாகும்
ஆளப்பா பரப்பிரம யோக மென்றே
     அடுக்கையிலே போதமுந்தான் உயரத் தூக்கும்
வாளப்பா கெவுனமணி விந்து நாதம்
     வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டு போகும்
நாளப்பா அண்ட மெல்லாஞ் சத்தி யோடு
     நடனமிடுஞ் சிலம்பொலியுங் காண லாமே.
6
  
காணலாம் பிரமத்தில் நிர்ண யந்தான்
     காட்டுகிறேன் வாசிமுனி கருவாய்க் கேளு
பூணலாம் அண்டவுச்சி தன்னில் நின்று
     பொறிகளையு முண்டாக்கிப் புவனந் தன்னில்
தோணலாம் உயிர்ப்பயிரைப் படைத்தெந் நாளுந்
     தொந்தமென்னும் ஏழுவகைத் தோற்ற மாகி
ஆணலாம் நாலுவகை யோனி யாகி
     அண்டமடா அனந்தனந்த மான வாறே.
7