பக்கம் எண் :

472சித்தர் பாடல்கள்

ஆச்சென்ற அபுரூப மான போதே
     அட்டமா சித்திவகை யெட்டு மாடும்;
மூச்சொன்றி யடங்கிப்போம் பிரமத் தூடே
     முன்னணியும் பின்னணியு மொன்றாய்ப் போகும்;
காச்சென்று காச்சிவிடு மவுனங் கண்டு
     கலைமாறி நின்றிடமே கனக பீடம்
நீச்சென்று மில்லையடா வுன்னைக் கண்டால்
     நிலைத்ததடா சமாதியென்ற மார்க்கந் தானே.
56
  
மார்க்கமுடன் தவசுநிலை யறியா மற்றான்
     மனந்தளர்ந்து திரிவார்கள் லோகத் துள்ளே
ஏக்கமுடன் முப்பதுக்குள் மவுனங் கண்டே
     இளவயசா யிருப்பார்கள் பெரியோர் மைந்தா!
காக்கவே சற்குருவின் பாதங் கண்டு
     கருணையுடன் அவர் பதத்தை வணங்கிப் போற்றித்
தீர்க்கமுடன் பிரமத்தில் மனந்தான் செல்லச்
     சீவனுக்குச் சீவனா யிருக்கலாமே.
57
  
இருக்கலாஞ் செடிபூடு கற்ப மில்லை
     ஏகாந்த மானதொரு பிரமந் தன்னில்
உருக்கியே மனமடங்கிப் பார்க்கும் போதே
     உத்தமனே காயமது வுறுதி யாச்சு;
மருக்கியே திரியாமல் மதம்பே சாமல்
     வண்டரோ டிணங்கியடா மருவி டாமல்
குருக்கியே கோளரிடஞ் சேர்ந்தி டாமற்
     குருபாதங் கண்டுமிகப் பணிந்து பாரே.
58
  
பாரென்று சொல்லிய மெய்ஞ்ஞான மூர்த்தி!
     பரத்தினுடை அடிமுடியும் பகுந்து சொல்லும்
சீரென்று சொப்பனங்க ளதிக மாகத்
     திடப்படவே காணுமிடந் தீர்க்கஞ் சொல்லும்
காரென்று மணம்பிறந்த இடந்தான் சொல்லும்
     கதிர்மதியுஞ் சுற்றிவரு மார்க்கஞ் சொல்லும்
வீரென்றே உயிர் பிறந்த இடந்தான் சொல்லும்
     வெற்றிபெற இந்தவகை விளம்பு வாயே.
59