உலும்பினி வனத்தின் தோற்றம் :
(வேறு)
மேகத்தை நோக்கி வளர்ந்த
மரங்கள் விழைந்தன - அவை
தாகத்தைத் தீர்க்கும்படி தண்ணீர்
கேட்கத் தழைந்தன!
கொண்டல் முழங்கி முழங்கி
மழைச்சலங் கொட்டின - அதை
உண்டு வளர்ந்தமரந் தலையால்
விண்ணை முட்டின!
மாயையைக் கண்ட உலும்பினிக்
காடு மகிழ்ந்தது - தன்
தாயை எதிர்கண்ட மைந்தன்என்
றுள்ளம் நெகிழ்ந்தது!
வானை எதிர்த்த மரங்கள்
வளைந்து வணங்கின - அறச்
சேனைக் கதிபதி தன்னை
அவள்அளிப் பாள்என!
(வேறு)
கிள்ளைதனை நிகர்மகளிர்
கேண்மை சொல்லக்
கிளர்மரங்கள் மலர்வீசக்
“கீர்த்தி ஓங்கும்
பிள்ளைதனை நீமாயை
பெறுக!” என்றே
பேரோசை எழுந்ததவ்
வனத்தி னுள்ளே!
|