(வேறு)
மலர்ப் பாயல் மேல்மாயை
இமைகள் மூடி,
மகிழ்வென்ற பெருநதியில்
மூழ்க லானாள்!
புலர்கின்ற பொழுதனைய
குழந்தை ஆங்கே,
புதுவுலகைத் தன்கண்ணால்
கூர்ந்து நோக்கும்!
ஒருமைந்தன் பிறந்துள்ளான்
என்ற செய்தி
உலும்பினியை உலுக்கிவிட
உளம் மகிழ்ந்தே,
அருமைந்தன் செய்திதனைச்
சாற்ற எண்ணி
அரசர்பால் மகாநாமர்
விரைந்து சென்றார்!
“பேரரசே வணக்கம்! நம்
பெருமைக் கெல்லாம்
பெருமைதர ஒருமைந்தன்
பிறந்தான்! வையம்
ஓரரசாய் அவன் கீழே
உய்யும் என்றே
உணர்கின்றேன்” என்றுரைத்தார்
மகா நாமர்!
செவியிற்போய் அமுதமொழி
சிந்தினாற் போல்,
சிலிர்ப்புற்ற மேனியொடும்
மன்னர் மன்னன்,
“புவிசென்று மகிழ்கின்ற
உலும்பி னிக்குப்
புறப்படுக!” என்றவுடன்
புறப்பட் டார்கள்!
|