நகர் அலங்காரம்
(வேறு)
தள்ளும் குலைவாழை
தன்னை வாசல்களில்
சார்த்தினார் - புகழ்
போர்த்தினார் - மணம்
அள்ளும் மலர்ப்பந்தல்
இட்டு மகிழ்ச்சியில்
ஆடினார் - விரைந்
தோடினார்!
தாரணி ஆள
வருகின் றவன்பெயர்
சாற்றினார் - சுடர்
ஏற்றினார்! - இலைத்
தோரணங்கள் எங்கும்
கட்டி மணிக்கொடி
தூக்கினார் - நலம்
தேக்கினார்!
இந்திரன் வந்து
பிறந்தவிழாஎன்
றியம்பினார் - பல்
இயத்தினார் - ஓரு
மந்திரம் போலும்
இசையிற் குளித்தனர்
மாந்தர்கள் - அதோ,
வேந்தர்கள்!
சாக்கியர் வந்து
நிறைந்த பெருந்திரள்
சாடவே - இருள்
ஓடவே - செய்தி
போக்கிய தால்வந்து
சேர்ந்தனர் வாணிகர்,
அந்தணர் - ஆசி,
தந்தனர்!
|