பக்கம் எண் :

24தமிழ்ஒளி கவிதைகள்

கிளியி னோடு பழகுங் காதல்
        கிளிகள் பேசும் நாடு - பெண்
        கிளிகள் பேசும் நாடு - புவி
வெளியில் நடனம் பயிலும் அலையின்
        நாதம் பொங்கும் நாடு - கடல்
        நாதம் பொங்கும் நாடு!

கம்பன் தந்த அமுத முண்டு
        களித்திடுந் தமிழ்நாடு - உளங்
        களித்திடுந் தமிழ்நாடு - பசுங்
கொம்பர்மீது குயில்கள் கவிதை
        கொஞ்சிடுந் தமிழ்நாடு - இசை
        கொஞ்சிடுந் தமிழ்நாடு!

காலம் என்ற கடலின் மீது
        கப்பலோட்டும் நாடு - புகழ்க்
        கப்பலோட்டும் நாடு - இந்த
ஞால மென்ற மேடை கண்ட
        நாடகத் தமிழ்நாடு - ஒரு
        நாடகத் தமிழ்நாடு!

உப்பு விளையும் முத்து விளையும்
        உணவு விளையும் நாடு - நல்
        உணவு விளையும் நாடு - ஒர்
ஒப்பி லாத உரிமை கொண்ட
        உணர்வு விளையும் நாடு - தமிழ்
        உணர்வு விளையும் நாடு!

‘அமுதசுரபி’ - 1951