பக்கம் எண் :

32தமிழ்ஒளி கவிதைகள்

பேச மனம் நாணுதடீ!

விட்டெறிந்த பட்டாசு விம்மி வெடித்திடவும்,
பொட்டலம் போல் மத்தாப்புப் பூப்போல் எரிந்திடவும்

தீபம் சுடர்கொண்டு, திக்கில் மினுக்கிடவும்
தீபா வளிவந்து சேர்ந்ததுகாண் இன்றைக்கு!

நீந்தும் குளிர் காற்றில் நீராட, ஆட மலர்
தீந்தேன் துளிசிதறித் தெண்ணீரை முத்தமிடும்!

முத்தமிட்ட மெல்லிதழால் மோகக் கதைசொல்ல
எத்திக்கும் செல்லுமணம் என்னைத் தழுவவரும்!

எண்ணையிட்டு நீராட என்னை அழைக்குமலர்ப்
பெண்ணே விலகிப்போ! பேசமனம் நாணுதடீ!

நேற்றிரவு மத்தாப்பில் நீண்ட சுடர்ப்பொறிகள்
காற்றில் கலகலெனக் கைகொட்டித் தாம்நகைக்க,

சென்றேன் அதனருகில், சிந்தை அதிர்ச்சியுற
நின்றேன், ஒருபொறிஎன் நேரில் நிமிர்ந்துரைக்கும்:

‘ஐயா, வரகவியே! அண்டபகி ரண்ட மெலாம்
நெய்யாய் உருக, மிக நெக்குருகப் பாடுவிரே!

‘வண்ணத் தெருவிடையே வந்த நிலவாக
எண்ணச் சுடராக’ ஏற்றிவைத்த தீபத்தை,

பாடவந்த பாடகரே, பாட்டை நிறுத்தய்யா!
தேடவந்த நல்லுவமை சீரழிந்து போச்சய்யா!

நிலவற்ற வானம் நிழலற்ற கானல்
இலகும் சுடரற்ற இல்லமிது காண், ஐயா!”

தீயிட் டெழுந்தபொறி திக்கில் தெறித்தபொறி
வாய்விட் டழுதுதுயர் வார்த்தைபல கூறிற்று!