பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 33

“விண்ணில் அழகழகாய், விந்தைசெய வந்தசுடர்’
மண்ணில் கருகி மடிந்ததுபோ லாயிற்று!
விண்ணிற் கருமுகிலில் வீசுகின்ற வில்லாகிக்
கண்ணில் தெரிந்த இழை கட்டறுந்து போயிற்று!

ஆடும் தறிகளுயிர் அல்லாடிப் போயிற்று!
பாடுகின்ற பாடல், பதங்கெட்டுப் போயிற்று!

சுற்றுகின்ற ராட்டினங்கள் சுற்றும் கிராமங்கள்
அற்ற குளம்போல் அழிந்தவாழ் வாயிற்று!

தத்துகின்ற நாடா தறிகெட்ட தாயிற்று!
புத்தாடை எங்கே? புகழ்ந்தநூல் பாட்டெங்கே?

பிசகுத் தொழில்செய்து பேதுற்றோம்!” என்றின்று
“நெசவுத் தொழில்செய்தோர் நெஞ்சொடிந்து போயிற்று!

‘சா வென்ற ஆடை தனைப்போர்த்து நிற்கின்றார்,
‘போ வென்றவரை நாம் போகவிட்டோம் அவ்வழியே!”

என்று துயர்மொழிகள் எத்தனையோ கூறிடவும், 
நின்றேன் நெடுநேரம், நீண்டபெரு மூச்சுவர!

விண்ணில் எரிந்தபொறி விந்தைசெய வந்தபொறி,
மண்ணில் விழுந்து மனந்துடிக்க லாயிற்று!

நீந்தும் குளிர்காற்றில் நீரலைகள் பாட்டிசைக்கத்
தீந்தேன் இதழ் சிவந்து சேர்ந்தமணத் தூதனுப்பி,

எண்ணெயிட்டு நீராட என்னை அழைக்குமலர்ப்
பெண்ணே விலகிப்போ! பேசமனம் நாணுதடீ

‘மனிதன்’ - 1954