பக்கம் எண் :

48தமிழ்ஒளி கவிதைகள்

தியாகச்சுடர்

சிந்தை குலைந்து திகைத்தழுத உன்னுருவைச்
சந்தையிலே விற்றார், சகாயமாய் - வந்தபணம்
வட்டிக்கு விட்டு வருமானம் பெற்றுநிதம்
மொட்டை யடித்தார் "முதல்"

நாளும் அழுதழுது நைந்தவுனை முன்னேற்றத்
தாளும் எழுத்தும் சதமென்றார் - ‘ஆளும்
உல’ கென்றார், ‘ஊ’ என்றார்; அன்னார் உனது
தலையெழுத்தை மாற்றாதவர்!

மண்ணில் உருண்டழுது மாரடித்தார்; நீ அழுத
கண்ணீர் இஃதென்று கடலலையை - எண்ணியவர்
பேசினார் நல்லபெயரெடுத்தார்; உன் பெயரை
ஏசினார் இன்னும் பலர்!

கதவற்ற வீடாகக் காட்சிதரக் கண்டார்
‘விதவை’யென் றார்‘இருண்ட வீடெ’ன்றார்-கதறினார்
ஏற்றும் சுடரை இவரணைத்தார் அல்லாது
காற்றின் கரமன்று காண்!

குங்குமமும் சவ்வாதும், கொத்து மலர்க்குழலும்
தங்கத் தமிழும் தனமாச்சு மங்களமாய்
வாழ்கின்றார் உன்னுருவ வணக்கம் நடத்தியிவர்,
வாழ்க உன் தியாகச் சுடர்!

‘மனிதன்’ - 1955