பக்கம் எண் :

50தமிழ்ஒளி கவிதைகள்

வாடா மலர்

விண்ணி லிருந்து பிறந்த அமுதம்
        விழுந்தது வித்துக்களாய் - அவை
மண்ணில் முளைத்தன வண்ணச் செடிமலர்
        என்னப் புகழுடனே!

அம்மலர் மாலை தொடுத்துநம் அன்னை
        அணிந்திடச் செய்தவனாம் - அவன்
நம்மைப் பிரிந்தும் உயிர்த்த கவிமணி
        நாஞ்சிற் பெரும்புலவன்!

எண்ணங்கள் என்ற பறவைகள் பாடும்
        இசையில் எழுந்தஇசை - அதை
உண்ணப் பறந்துநம் உள்ளம் உலாவ
        உயர்ந்த தமிழ்க்கவிதை!

கற்பனை யென்ற மழைவர உள்ளம்
        களித்து நடமாட - ‘இது
அற்புதம், அற்புதம்!’ என்றிடும் செஞ்சொல்
        அளித்த தமிழ்ப்புலவன்!

மூத்து நரைதிரை வந்திட ஆயுள்
        முடிந்தது நாமறிவோம் - எனில்
கோத்து நமக்குக் கொடுத்திட்ட மாலையின்
        கோலம் அழிந்திடுமோ?

வஞ்சகக் காலன் வருவதும் போவதும்
        வாழ்க்கை நியதியடா! - எனில்
செஞ்சொற் கவிதைகள் காலனை வென்று
        சிரிப்ப தியற்கையடா!

-1955
‘கவிமணி தேசிக விநாயகம் நினைவு மலர்’