பாரதி பரம்பரை
சீறி அடித்துச் சுழன்ற அலைகளில்
சிக்கிய ஓர் படகாய் - தடு
மாறி இளைத்து மடிந்த மகாகவி
தன்சரிதம் உரைப்பேன்!
கண்வழி சொட்டுங் குருதி யொடுங்
கானில் வழிதடவி - தமிழ்ப்
பண்வழி சென்று பழம்புகழ் சேர்த்தவன்
பாரதி என்பவனாம்!
கொத்தும் வறுமைக் கழுகு பறந்திடக்
கூகை அலறிவிழப் - பணப்
பித்தர் திரியக் கிடந்த இருளைப்
பிளந்து பிளந்தெறிந்தான்!
கானில் நடந்து நடந்து பெரும்புயற்
காற்றில் ஒருசுடராய் - தனி
மீனென நின்று நிலைத்தது சோக
மிகுந்த கதையலவோ?
காலக் கடலலை கொட்டிய பாடலிற்
காற்றெனும் யாழ்நரம்பில் - பெரு
ஞாலத் திசைகளில் தத்தி நடந்திடும்
நாரத கானம்எது?
பட்டப் பகல்வரும் சூரிய னாகிப்
படும்இருள் வந்தவுடன் - ஒரு
வட்ட மதியென வந்து கவிஞரை
வாழ்த்தும் கவிதைஎது?
ஆண்டுகள் சென்று மடிய அவற்றை
அழித்துப் புதுநெறியாய்ப் - புவி
மீண்டும் பெறச்சுடர் மின்னல் எடுத்து
மிடைந்த கவிதைஎது?
|