ரோஜா மகள்
முள்எனும் வாள்எடுத்துப் - புது
மோகச் சுடர்தொடுத்துக்
கள்ளிதழ் தான்துடிக்க - ஒரு
கன்னிகை நின்றிருந்தாள்!
உதயச் சுடர்எனவே - அவள்
உடலிற் புதுப்பொலிவு
இதயங் குளிர்ந்திடவே - நான்
எட்டிப் பிடிக்கச் சென்றேன்!
வாள்முளை முள்ளெதிர்க்கும் - அவள்
வாசம் எனைஇழுக்கும்!
தோள்இருக் கும்வரையில் - ஒரு
தோல்வி வருவதுண்டோ?
எட்டிப் பிடித்துவிட்டேன் - அவள்
என்னை வெறுக்கவில்லை!
கட்டிய வாள்முனைமுள் - என்
கைகளிற் குத்தியது!
மங்கையைக் காத்ததும்நான் - அவள்
மானத்தைக் காத்ததும்நான்!
தங்கையை விட்டுவிடும்” - எனத்
தத்துவம் பேசிற்றுமுள்!
பெற்றவர் காத்திடுவார் - பெண்ணைப்
பேணி வளர்த்திடுவார்
உற்றிடும் காதலனே - அவள்
உள்ளங் கவர்ந்திடுவான்!
|