கவிஞர் கோமான்
கொடியின்றி முடியின்றிக்
குலைகின்ற தமிழ்வாழ்வைக்
கொன்றதன் ஆணிவேரை
அடியின்றிக் கெல்லிடச்
சூழ்ந்தவர் நெஞ்சினில்
ஆணிகொண் டறைந்து, சிங்கம்
அடியூன்றி நின்றுகண்
அழற்பொறி பறந்திட
ஆர்க்கின்ற அவ்வண்ணமாய்,
இடிகொண்ட குரலினால்
எழுப்பினான் தமிழரை
எந்தைபா ரதி தாசனே!
‘அடிமைகொள், எனை!’ என்று
புலவன் ஒவ்வொருவனும்
அயலவன் கால்பிடிக்க,
மிடிமைகொள் வாழ்விலும்
‘செந்தமிழ்க் கெதிரிஎன்
எதிரிதான்!’ என்றுகூறிக்
குடிமையும் கொற்றமும்
ஏதடா தமிழன்னை
கொடியின்றி நிற்கும்நாளில்
ஒடிகின்ற செடியல்ல
ஆலடா தமிழ்என்
றுணர்த்தினான் கவிஞர்கோமான்!
|