பக்கம் எண் :

46தமிழ்ஒளி கவிதைகள்2

புதுவைத் தொழிலாளிக்குக்
கோவைத் தொழிலாளியின் கடிதம்!

தோழனே, 1930 ஜீலையில் - 

கார் கடலும் வாயடங்க, காற்றும் விசை குறைய 
ஊர் முழுதும் உன்னுடைய உத்வேகப் போராட்டம்!

அன்று, 

‘சங்காரம் செய்திடுவேன்’ என்றெழுந்த சர்க்காரை 
சிங்கப் படைபோலே சீறி யெதிர்த்தடித்து 
ரத்தப் புனல்சிந்தி நாளெல்லாம் போர்செய்தாய் 
யுத்தக் கடைசியிலே உன்னுடைய வெற்றியொலி!

உனது தியாகத்தால், 

பெற்ற உரிமையின்று பேடிகளின் சூழ்ச்சியினால் 
குற்றுயிராய்ப் போகும் கொடிய நிலைகண்டு 
நெஞ்சு கொதித்து நிலைகுலைந்து சோகித்தாய்! 
அஞ்சாத உள்ளம் அயர்வில் விழலாமோ?

நாங்கள், 

முப்பதுநாள் முப்பதுநாள் முப்பதுநாள் போர் தொடுத்தோம்! 
அப்பன் இறந்தான்; அமுதனைய தாய் மடிந்தாள்! 
கன்னத்தில் பாலூறும் தேனூறும் கைக்குழந்தை 
தன்னைக் கொலை செய்தார் தாயின் விழி முன்னே!

அன்றைக்கு, 

எங்கள் குடிசைகளில் எமன் கூத்து! சாக்காடு! 
வெங்குருதி வெள்ளம்! மரண வெடியோசை! 
சூழ்ந்த இருளில், தியாகச் சுடர் எடுத்தோம்! 
சூழ்ந்த இருள் தன்னைச் சுட்டெரித்தோம் தியாகத்தால்! 
சங்கம் அளித்திருந்த சாகாத ஒற்றுமையால் 
அங்கத்தில் ஊற்றெடுத்த ஆற்றல் பெருக்கால் 
குடிசைகளைக் கோட்டைகளாய்க் கொத்தளமாய் மாற்றி 
ஒடித்தோம் பகையெலும்பை! உண்மைப் புகழ் பெற்றோம்!